பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு.. விவேகானந்தர் மண்டபத்தில்.. தியானத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி

Su.tha Arivalagan
May 30, 2024,07:05 PM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானத்தைத் தொடங்கியுள்ளார். இரவு பகலாக அவர் ஜூன் 1ம் தேதி மாலை வரை இந்த தியானத்தைத் தொடரவுள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தார். அவர் அங்குள்ள விவேகானந்தர் நினைவு தியான மண்டபத்தில் 2 நாட்கள் தியானம் செய்வதற்காக வந்துள்ளார். இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு தடைகளை காவல்துறை விதித்துள்ளது. மீனவர்கள் மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.




கன்னியாகுமரி வந்துள்ள பிரதமர் மோடி முதலில் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். அதன் பின்னர் அவர் விவேகானந்தர் தியான மண்டபம் சென்றார். மண்டபத்திற்கு சென்ற அவர் அங்கிருந்தபடி மண்டபத்தை சுற்றிப் பார்த்தார். பின்னர் மண்டபத்திற்குள் அவர் சென்றார். அங்கு அவருக்கு நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.  இதைத் தொடர்ந்து பிரதமரின் தியானம் தற்போது தொடங்கியுள்ளது. ஜூன் 1ம் தேதி மாலை வரை தனது தியானத்தை இரவு பகலாக தொடரவுள்ளார் பிரதமர் மோடி.


திருமயத்திற்கு வந்த அமைச்சர் அமித்ஷா


மறுபக்கம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். பல்வேறு கோவில்களுக்கு அவர் விஜயம் செய்தார்.   பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜை செய்து விட்டு விமானம் மூலம் அவர் திருச்சிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சென்றார். அங்குள்ள கோட்டை பைரவர் கோவிலில் பக்தியுடன் வழிபட்டார். 


அமைச்சர் அமித் ஷாவுடன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, எச். ராஜா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். அடுத்து நாளை காலை திருப்பதி சென்று ஏழுமலையான் கோவிலில் அவர் வழிபடவுள்ளார். 


அடுத்தடுத்து இரு பெரும் பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதால் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. பிரதமர் தியான திட்டமானது வரவேற்பையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளது. பாஜக கூட்டணித் தலைவர்கள் இதை வரவேற்றுள்ளனர். காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது. மதுரையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.