அடுத்த வருடம் பிரதமர் மோடி அவரது வீட்டில் கொடி ஏற்றுவார்.. மல்லிகார்ஜூன கார்கே

Su.tha Arivalagan
Aug 15, 2023,11:50 AM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வருடமும் கொடி ஏற்றுவார். ஆனால் அடுத்த முறை அவரது வீட்டில் கொடி ஏற்றுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் இன்று நடந்த சுதந்திர தின விழாவில் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்கவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் தலைவரே சுதந்திர தின விழாவைப் புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதுகுறித்து மல்லிகார்ஜூன கார்கே விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது கார்கே கூறியதாவது:

முதலில் எனக்கு கண்ணில் பிரச்சினை உள்ளது. 2வது, எனது வீட்டில் நான் தேசியக் கொடியை ஏற்றியாக வேண்டும். அதை நான் தவிர்க்க முடியாது.  அதன் பிறகு காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்து அங்கும் தேசியக் கொடியேற்றி வைத்தேன். இதையெல்லாம் முடித்து விட்டு நான் செங்கோட்டைக்கு வருவது என்பது சாத்தியமற்றது. பாதுகாப்பு நடைமுறைகளும் கெடுபிடியாக உள்ளன. மேலும் செங்கோட்டை விழாவுக்கு நான் வந்தால் பிரதமர் முடித்து விட்டுப் போகும் வரை யாரையும் வெளியே அனுப்பவும் மாட்டார்கள். இதையெல்லாம் யோசித்துதான் நான் அங்கு போகவில்லை.

மீண்டும் ஆட்சிக்கு வருவேன் ன்று பிரதமர் சொல்கிறார். ஜெயித்து வரும் ஒவ்வொருவரும் சொல்லும் வார்த்தைதான் இது.  நீங்கள் ஜெயிப்பதும் தோற்பதும் மக்கள் கையில்தான் உள்ளது. வாக்காளர்கள் கையில்தான் உள்ளது.

2024ம் ஆண்டும் நான்தான் கொடியேற்றுவேன் என்று சொல்வது ஆணவம். எதிர்க்கட்சிகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் இவர் எப்படி நாட்டை வலிமையாக உருவாக்கி வருகிறேன் என்று சொல்கிறார்?. எதிர்க்கட்சிகள் இல்லாமல் எப்படி நாடு வலிமையாகும்.

அடுத்த ஆண்டும் நிச்சயம் மோடி தேசியக் கொடி ஏற்றுவார். ஆனால் செங்கோட்டையில் அல்ல, அவரது வீட்டில். அடுத்த ஆகஸ்ட் 15ம் தேதி செங்கோட்டையிலிருந்து நாட்டின் சாதனைகளை நான் மக்களுக்குச் சொல்வேன் என்றார் கார்கே.