ரொம்ப இழுக்காதீங்க.. சட்டுப் புட்டுன்னு பேச்சை முடிங்கப்பா.. பாஜகவுக்கு பிரதமர் மோடி உத்தரவு!

Su.tha Arivalagan
Jun 07, 2024,10:03 AM IST

டெல்லி: கூட்டணிக் கட்சிகளுக்கான அமைச்சர் பதவி குறித்த பேச்சுக்களை விரைந்து முடிக்குமாறு பாஜக தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.


பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி 9ம் தேதி பதவியேற்கத் திட்டமிட்டுள்ளார். மறுபக்கம் கூட்டணிக் கட்சிகளுடன் அமைச்சர் பதவி தொடர்பான பேச்சுவார்த்தையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஒவ்வொரு கூட்டணிக் கட்சியும் ஏகப்பட்ட கோரிக்கைகளையும், நிபந்தனைகளையும் விதித்து வருவதால் பாஜக தலைமை கலங்கிப் போயுள்ளதாம்.




- தத்தமது மாநிலங்களுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.


- ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நாடு தழுவிய அளவில் நடத்த வேண்டும்


- தங்களது மாநிலங்களுக்கு சிறப்பு நிதி தர வேண்டும்.


- தங்களுக்கு இத்தனை கேபினட்அமைச்சர் பதவி, இத்தனை இணை அமைச்சர் பதவி தர வேண்டும்


இவையெல்லாம் கூட்டணிக் கட்சிகள் வைத்துள்ள சில நிபந்தனைகளாகும். இதுதவிர ரகசியமாக என்னவெல்லாம் கோரிக்கை வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. பல கட்சிகள் வழக்குகளை சுமந்து நிற்கின்றன. அந்த வழக்குகளையெல்லாம் முடித்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் முக்கிய சிக்கலாக பார்க்கப்படுவது ஆந்திரா, பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும் என்ற கோரிக்கை.  இந்தக் கோரிக்கையை ஏற்றால் வேறு பல மாநிலங்களும் இதே கோரிக்கையுடன் கிளம்பும். நாம் அதைப் புறக்கணித்தால், பாஜக பாரபட்சம் காட்டுவதாக தேவையில்லாத சிக்கல்கள் எழும். அது பாஜகவை மேலும் பலவீனப்படுத்தும் என்று பாஜக அஞ்சுகிறதாம்.


ஏற்கனவே தமிழ்நாடு அரசு, மழை வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் கூட அது வழக்குத் தொடர்ந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டும் சிறப்பு கவனிப்பை மத்திய பாஜக கூட்டணி அரசு கொடுத்தால் அது தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் புயலைக் கிளப்பக் கூடும். எல்லாம் சேர்ந்து உச்சநீதிமன்றத்திற்குப் போனால் பாஜகவுக்கு மேலும் சிக்கலை அது ஏற்படுத்தும் என்பதால் இந்தவிவகாரத்தில் பாஜக உத்தரவாதம் தருவதை தவிர்க்க முயல்கிறதாம்.


இதேபோல முக்கிய கேபினட் அமைச்சர் பதவிகளை தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகியவை கோருவதும் பாஜகவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது... மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே கூட முக்கியமான கேபினட் பதவியை எதிர்பார்க்கிறாராம்.


ஒரே பதவியை ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் கேட்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் துணைப் பிரதமர் பதவி குறித்து இதுவரை பேச்சு எழவில்லை. ஒரு வேளை கூட்டணிக் கட்சிகளிடம் முக்கியத் துறைகள் போவதைத் தடுக்க பாஜகவே அந்தப் பதவியை யாராவது ஒரு முக்கியக் கட்சிக்கு கொடுத்து ஆஃப் செய்யவும் முயற்சிக்கலாம்.. ஆனால் அதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.. காரணம், மோடிக்கு சமமாக யாரையும் அமர வைக்க பாஜக முடிவு செய்யாது. அதை மோடியும் கூட விரும்ப மாட்டார் என்பதால்.


இப்படி கூட்டணிக் கட்சிகளுக்கான அமைச்சரவைப் பங்கீடு தொடர்பான பேச்சுக்கள் குழப்பமான நிலையில் இருப்பதால் பிரதமர் மோடிக்கும் அப்செட்டாம். பாஜக முக்கியத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தையை சீக்கிரம் முடியுங்கள். அதுதான் சரியாக இருக்கும். இழுபறி நிலவுவது சரியல்ல. அது மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளாராம். அனேகமாக நாளைக்குள் இந்தப் பேச்சுவார்த்தைகளை முடித்து விட பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.