பிரதர் நரேந்திர மோடி வருகை.. ராமேஸ்வரத்தில் 12 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Meenakshi
Jan 19, 2024,01:37 PM IST

ராமேஸ்வரம்: பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள 12 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி  இன்று சென்னை வருகிறார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.


பிரதமர் வருகையை ஒட்டி சென்னை மற்றும் அவர் பயணம் செய்ய உள்ள பிற மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22 ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் கடந்த 12ஆம் தேதி முதல் விரதம் இருந்து வருகிறார். மேலும் அவர் நாட்டில் உள்ள முக்கியக் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனமும் செய்து வருகிறார். 


திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோவிலில் சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். நாளை ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு, மதியம் 12:55 மணி அளவில் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டு செல்கிறார். மதியம் 2 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி விட்டு சாமி தரிசனம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் புனித நீர் சேகரிக்க உள்ளார். 


இந்நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி ராமேஸ்வரத்தில் உள்ள 12 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசார் தங்குவதற்காக இந்த 12 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.


தனது ராமேஸ்வரம் பயணத்தை முடித்த பிறகு,  ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வந்து அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்ல உள்ளார் பிரதமர்.