தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.. ஏப்ரல் 9 டூ 14 வரை.. 4 நாட்கள் சூறாவளி பிரச்சாரம்!

Su.tha Arivalagan
Apr 05, 2024,06:18 PM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை தமிழ்நாட்டில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். தமிழ்நாட்டுத் தலைவர்களின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இந்த பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தமிழ்நாட்டில் ஒரு ரவுண்டு பிரச்சாரத்தை முடித்து விட்டார் பிரதமர் மோடி. நெல்லை, கன்னியாகுமரி, கோவை, மதுரை என்று ஒரு சுற்று பொதுக் கூட்டங்களை நடத்தி முடித்து விட்டார் பிரதமர் மோடி. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு அடுத்த கட்ட பிரச்சாரத்துக்காக ஏப்ரல் 9ம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகிறார்.


ஏப்ரல் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை அவர் தீவிர பிரச்சாரத்தில் குதிக்கவுள்ளார். ரோடுஷோ, பொதுக் கூட்டங்கள் என்று பிரதமரின் பிரச்சாரப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.




ஏப்ரல் 9ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, வேலூர் மற்றும் தென் சென்னை தொகுதிகளில் ரோடுஷோவுடன் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இந்த கூட்டங்களில் வேலூர் வேட்பாளர் ஏசி சண்முகம், தென் சென்னை டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை வினோஜ் பி செல்வம், வட சென்னை பால் கனகராஜ், திருவள்ளூர் தனி தொகுதி பொன் பால கணபதி ஆகியோருக்காக வாக்கு சேகரிப்பார்.


ஏப்ரல் 10ம் தேதி நீலகிரி தனி தொகுதியில் மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசவுள்ளார் பிரதமர் மோடி. ரோடுஷோவையும் அவர் நடத்தவுள்ளார். இதைத் தொடர்ந்து கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்வார்.


ஏப்ரல் 13ம் தேதி பெரம்பலூரில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இதில் பாரிவேந்தர் உள்ளிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பேசவுள்ளார்.


ஏப்ரல் 14ம் தேதி விருதுநகரில் பிரமாண்ட நிறைவு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகை ராதிகா உள்ளிட்டோருக்காக இதில் பிரச்சாரம் செய்து பேசவுள்ளார் பிரதமர் மோடி.


பிரதமர் மோடி தவிர, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், நிதின் கத்காரி, ஸ்மிருதி இராணி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் தமிழ்நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.