நான் பயலாஜிக்கலாக பிறக்கவில்லை.. கடவுள் அனுப்பி வச்சிருக்கார்.. பிரதமர் மோடி பரபர பேட்டி!

Su.tha Arivalagan
May 22, 2024,05:44 PM IST

டெல்லி:  எனது தாயார் இறந்த பின்னர் நான் யோசித்துப் பார்த்தேன். நிச்சயம் நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை.. நான் மனிதப் பிறவியாக இருக்கவும் வாய்ப்பில்லை.. கடவுள்தான் ஏதோ ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்பதற்காக என்னை அனுப்பி வைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அவரது இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிஷா மாநிலத்துக்கு பிரச்சாரத்திற்காக சென்ற பிரதமர் மோடி, நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். நியூஸ் 18 செய்தியாளர் பிரதமர் மோடியிடம் எத்தனையோ வேலைகளைச் செய்கிறீர்கள்.. பல மாநிலங்களுக்கும் செல்கிறீர்கள்.. ஓய்வெடுப்பதே இல்லை.. உங்களுக்கு சோர்வே ஏற்படாதா என்று கேட்டார். அதற்கு மோடி அளித்த பதில் இதுதான்: 


எனது தாயார் இருக்கும் வரை நான் எல்லோரையும் போலத்தான் பிறந்தேன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் இறந்த பிறகு எனக்குக் கிடைத்த சில அனுபவங்களை வைத்துப் பார்த்தபோதுதான் எனக்குப் புரிந்தது நிச்சயம் நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று.  நிச்சயம் என்னிடம் உள்ள ஆற்றல் சாதாரண மனிதர்களிடம் இல்லாதது. கடவுளால் மட்டுமே இதைத் தர முடியும். இந்த கருத்தில் நான் உடன்படுகிறேன். 




கடவுள்தான் என்னை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார்.. அவரது சக்தியை எனக்குக் கொடுத்திருக்கிறார். அவரது கருவி நான். என் மூலமாக அவர் எதையோ செய்ய விரும்புகிறார். அதற்காகவே நான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன். அவர்தான் இந்த சக்தியைக் கொடுத்துள்ளார். அப்படித்தான் நான் கருதுகிறேன். நிச்சயம் இதை பலர் கேலி செய்வார்கள், கிண்டலடிப்பார்கள்.. ஆனால் நிச்சயம், இது மனித உடல் அல்ல. ஒரு சாதாரண மனித உடலிலிருந்து இத்தகைய ஆற்றல் வர வாய்ப்பில்லை.


இது அவரது வேலை. அதனால்தான் இத்தகைய சக்தியை அவர் அளித்துள்ளார். இரக்கத்தைக் கொடுத்துள்ளார். எல்லாவற்றையும் செய்து முடிக்கும் தன்மையைக் கொடுத்துள்ளார். நான் ஒன்றுமே இல்லை. இது கடவுளின் வடிவம். எனது உருவில் அவர் தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.


கிட்டத்தட்ட "நான் மனிதன் அல்ல.. கடவுள்" என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மோடியின் இந்தப் பேட்டியை பாஜகவினர் பல்வேறு தளங்களிலும் பரப்பி வருகின்றனர். தற்போது லோக்சபா தேர்தல் வட மாநிலங்களில் விறுவிறுப்படைந்துள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடியின் இந்த பேட்டி விவாதங்களையும் எழுப்பியுள்ளது.