வட கிழக்கையும், இந்தியாவின் பிற பகுதிகளையும் இணைத்தவர் மோடி.. அமித் ஷா

Su.tha Arivalagan
Aug 09, 2023,09:25 PM IST

டெல்லி: மணிப்பூருக்குச் சென்று ஒரு நாடகத்தை அரங்கேற்றி விட்டு வந்திருக்கிறார் ராகுல் காந்தி என்று மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு இன்று ராகுல் காந்தி அனல் பறக்கப் பேசினார். இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி கொடுக்கும் வகையில் படு காட்டமாக உரையாற்றினார்.


அமித்ஷாவின் உரையிலிருந்து சில துளிகள்:


பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. மணிப்பூரை வைத்து நடத்தப்படும் அரசியல் வெட்கக்கேடானது.


வட கிழக்கு மாநிலத்துக்காக அவர்கள் எதுவுமே செய்ததில்லை. நாங்கள் செய்துள்ளோம். 10 வருட கால யூபிஏ ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை. உட்கட்சிப் பூசல்கள்தான் சிறப்பாக நடந்ததே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை.


எங்களது ஆட்சியில் வட கிழக்கு மாநிலங்களில் வன்முறை 68 சதவீத அளவுக்கு குறைந்து விட்டது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பெருகியுள்ளன. பயண தூரம் குறைந்து விட்டது. கடந்த 9 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட முறை பிரதமர் மோடி வட கிழக்குக்குச் சென்றுள்ளார். வட கிழக்கையம், இந்தியாவின் பிற பகுதிகளையும் இணைத்தவர் மோடிதான்.




மக்களை திசை திருப்புவதற்காகவே இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். கடந்த 30 வருடங்களாக  வாரிசு அரசியலால் நாடு கடும் சேதமடைந்து விட்டது. ஊழல், ஜாதீயம் ஆகியவற்றால் நாட்டை சீரழித்து விட்டனர். இவை எல்லாவற்றையும் பிரதமர் மோடி முடித்து வைத்து விட்டார். செயல்படும் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.


சுதந்திரத்திற்குப் பிறகு  இந்தியாவின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் பெற்ற ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது பிரதமர் மோடி மட்டுமே. இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மக்களின் விருப்பம் அல்ல. இது மக்களை திசை திருப்பவும், மக்களின் விருப்பத்தை அவமதிக்கவுமே கொண்டு வரப்பட்டது.




காங்கிரஸ் போல நாங்கள் வெற்றி பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயல மாட்டோம். நரசிம்மராவ் பதவியில் இருந்தபோது ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  அரசைக் காப்பாற்ற காங்கிரஸ் துடித்தது. அதில் வெற்றியும் பெற்றனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கும், வேறு பல தலைவர்களுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டது. பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.  1999ம் ஆண்டு வாஜ்பாய் அரசும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு ஓட்டில் தோற்றது. நாங்கள் நினைத்திருந்தால் பணத்தை வாரியிறைத்து ஜெயித்திருக்கலாம். ஆனால் நாங்கள் அப்படிச் செய்யவில்லை.


ராகுல் காந்தி மணிப்பூருக்குப் போனார். நான் அதை வரவேற்கிறேன். ஆனால் அங்கு போய் அவர் நாடகம் நடத்தினார். அங்கு அவர் சுரசந்த்பூருக்கு சாலை மார்க்கமாக போகப் போவதாக கூறினார். ஹெலிகாப்டரில் போகலாமே என்று நாங்கள் கூறினோம். அவர் கேட்கவில்லை.  அடுத்த நாள் ஹெலிகாப்டரில் அவர் போனார். அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதை மக்கள் கவனிக்க மாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.. அவர்கள் கவனிப்பார்கள் என்றார் அமித் ஷா.