சென்னை - மைசூர் இடையே 2வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Su.tha Arivalagan
Mar 12, 2024,11:48 AM IST

அகமதாபாத்: மைசூரு- சென்னை சென்டிரல் ரயில் நிலையங்களுக்கு இடையே 2வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.


குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடந்த விழாவில் 10 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார். இதில் முக்கியமான ஒரு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் மைசூர் இடையிலான இரண்டாவது வந்தே பாரத் ரயிலாகும். ஏற்கனவே இதே மார்க்கத்தில் ஒரு வந்தே பாரத் ரயில் உள்ளது. இந்த ரயிலுக்கு நல்ல கிராக்கி  இருப்பதால் இரண்டாவது ரயிலை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.




இது தவிர இதே நிகழ்ச்சியில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வந்தே பாரத் ரயில்கள்  விவரம்: 


அகமதாபாத் - மும்பை சென்ட்ரல், செகந்திராபாத் - விசாகப்பட்டினம், மைசூர் - சென்னை, பாட்னா - லக்னோ, நியூ ஜல்பைகுரி - பாட்னா, பூரி - விசாகப்பட்டினம், லக்னோ - டேராடூன், கலபர்கி - பெங்களூரு, ராஞ்சி - வாரணாசி, கஜுராகோ - டெல்லி.


இது தவிர அகமதாபாத் - ஜாம்நகர் வந்தே பாரத் ரயில் துவாரகா வரையிலும், ஆஜ்மீர்  - டெல்லி சராய் கோகிலா வந்தே பாரத் ரயில் சண்டிகர் வரையிலும், கோரக்பூர் - லக்னோ வந்தே பாரத் ரயில் பிரக்யா ராஜ் வரையிலும், திருவனந்தபுரம் - காசர்கோடு வந்தே பாரத் ரயில் மங்களூர் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையும் இன்று பிரதமர் தொடங்கி வைத்தார்.


இது தவிர அசன்சோல் - ஹதியா மற்றும் திருப்பதி - கொல்லம் இடையிலான புதிய பாசஞ்சர் ரயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.