லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின்.. ஜூன் 20ல்.. முதல் முறையாக சென்னை வரும் பிரதமர் மோடி!

Meenakshi
Jun 15, 2024,05:10 PM IST

சென்னை: சென்னை - நாகர்கோவில், மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க வரும் 20ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.


பிரதமர் மோடி வரும் 20ம் தேதி வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க சென்னை வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  மக்களவை தேர்தலில்  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள நிலையில் முதல் முறையாக தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி. அதேசமயம், தென்னிந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரியைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு சில இடங்கள் கிடைத்த நிலையில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மட்டும் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக தோல்வியைத் தழுவிய நிலையில் பிரதமர் வருவது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


பிரதமர் மோடி சென்னை வருவதை முன்னிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - மைசூர், சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, திருவனந்தபுரம் - காசர்கோடு, சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சென்னை எழும்பூர் - நாகர்கோயில் இடையே வாராந்திர வந்தே பாரத் ரயில் சேவையும் இயக்கப்படுகிறது. 




இந்நிலையில் சென்னை எழும்பூர் - நாகர்கோயில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை தினசரி ரயில் சேவையாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். அத்துடன் ரயில் வாரியத்திற்கும் பரிந்துரை செய்தனர். பரிந்துரையின் அடிப்படையில் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே தினசரி வந்தே பாரத் ரயில் சேவையை இயக்க அனுமதி அளித்துள்ளது. 


இதுதவிர புதிதாக மதுரை - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கவே பிரதமர் மோடி வரும் 20ம் தேதி சென்னை வருகிறார். பிரதமர் வருகையை ஒட்டி ரயில்வே அதிகாரிகள் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.