அடுத்த 1000 ஆண்டுகளுக்கான களத்தை உருவாக்கி வருகிறோம்.. பிரதமர் மோடி பெருமிதம்

Su.tha Arivalagan
Aug 15, 2023,09:26 AM IST

டெல்லி: இந்தியாவுக்கு, அடுத்த 1000 ஆண்டுகளுக்கான களத்தை உருவாக்கி வருகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மக்கள் வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து கொண்டாடி வருகின்றனர்.


டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரந்திர மோடி சுதந்திர தின உரையாற்றினார். தேசியக் கொடியை ஏற்றி வைத்து செங்கோட்டையில் உரையாற்றினார் பிரதமர் மோடி. பிரதமர் நரேந்திர மோடியின் 10வது சுதந்திர தின உரை இது என்பது குறிப்பிடத்தக்கது


பிரதமர் மோடியின் பேச்சிலிருந்து:




வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் மிகப் பெரிய பலம். விண்வெளிமுதல் கிராமங்களில் இன்டர்நெட் வரை நாம் அனைத்துத் துறையிலும் சாதித்துள்ளோம். தனது நோக்கங்களை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.


அடிக்கல் நாட்டிய அத்தனை திட்டங்களையும் அரசு தொடங்கி வைத்து வருகிறது. நாம் மிகப் பெரியவற்றுக்கு குறி வைத்து நகர்கிறோம்.. தொலைநோக்குடன் செயல்படுகிறோம். 15,000 கோடி கைவினைத் தொழிலாளர்களுக்குப் பலன் அளிக்கக் கூடிய திட்டம் விரைவில் தொடங்கப்படும். இது ஏழை, எளிய கைவினைத் தொழிலாளர்களுக்குப் பலன் தரும். இவர்களில் பெரும்பாலானவர்கள் பிற்படுத்தப்பட்ட  சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.


2014ம் ஆண்டு நாம் வலிமையான அரசை உருவாக்கினோம்.. சீரமைப்புகள் தொடங்கின. 2019ம் ஆண்டு பல்வேறு சீரமைப்புகளை தொடரும் பலம் மோடிக்குக் கிடைத்தது. நாம் செயல்படுத்திய சீரமைப்புகளும், நமது செயல்பாடுகளும், நாம் அடைந்த மாற்றங்களும் நாட்டை வலுவாக்கியுள்ளன.


இந்தியாவுக்குத் தேவையான அடுத்த 1000 ஆண்டுகளுக்குரிய களத்தை நாம் ஏற்படுத்தும் நோக்கில் நாம் உழைக்கிறோம்.  நாடாளுமன்றத்தில் முழு மெஜாரிட்டியுடன் கூடிய அரசு இருந்தால்தான் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நாடு தீர்மானித்ததால்தான் நம்மைத் தேர்ந்தெடுத்தனர்.


நிலையற்ற அரசுகளிடமிருந்து, பலமுறை நாட்டை ஊழல்களால் சீர்குலைத்த அரசுகளிடமிருந்து நாம் நாட்டை விடுவித்தோம். எனது அரசில், ஒவ்வொரு முடிவிலும் "நாடுதான் முதலில்" என்பதே பிரதானமாக இருக்கும்.


நமது நாட்டில் வாய்ப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. எல்லாவிதமான வாய்ப்புகளுக்கும் இங்கு இடம் உள்ளது. இவை புதிய உயரத்தை எட்டும்.  இந்தியா ஜி20 கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் வாய்ப்பைப் பெற்றது. இப்போது இந்தியாவுக்கு வருவதற்கு உலக நாடுகளின் மக்கள் விரும்புகிறார்கள்.


இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவை இனி எதுவும் தடுக்க முடியாது. நிறுத்த முடியாது. கோவிட்டுக்குப் பிறகு உலகத்தின் சிந்தனை மாறியுள்ளது. புதிய உலக வரிசை உருவாகியுள்ளது. இது இந்தியாவுக்குச் சாதகமாகியுள்ளது. இந்தியாவை அடித்தளத்திலிருந்து நாம் வளர்த்தெடுத்து வருகிறோம், வலுப்படுத்தி வருகிறோம். நாட்டு மக்களாகிய நீங்கள் அதற்குத் துணை நிற்கிறீர்கள் என்றார் பிரதமர் மோடி.