சபாநாயகர் அவர்களே.. நீங்க சிரிச்சுட்டே சமாளிக்கிறீங்க.. ஆனால் இவர்கள் விஷமக்காரர்கள்.. பிரதமர் மோடி!

Su.tha Arivalagan
Jul 02, 2024,07:59 PM IST

டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று மிகப் பெரிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் ராகுல் காந்தி. வரம்புகளை மீறி விட்டார். சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறார். இவர்கள் மிகுந்த உள்நோக்கத்துடன், விஷமத்தனத்துடன் செயல்படுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து பிரதமர் மோடி ஆற்றிய உரை:




சபாநாயகர் அவர்களே கடினமான நேரத்திலும் கூட நீங்கள் புன்னகை பூத்த முகத்துடன் இருக்கிறீர்கள். ஆனால் நேற்று அவையில் நடந்தது மிகமிக தீவிரமானது. அவையின் மாண்பை சீர்குலைத்து விட்டனர். அவர்கள் மிகுந்த மோசமான உள்நோக்கத்துடன் இருக்கிறார்கள். இதை சாதாரண செயலாக கருத முடியாது.


எதிர்க்கட்சித் தலைவர் வரம்பு மீறி விட்டார். அவையின் மாண்பை குலைத்து விட்டார். சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறார். அக்னவீர் தொடர்பாக பொய் பேசுகிறார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து பொய் பேசுகிறார்கள். இட ஒதுக்கீடு குறித்தும் பொய்யாக பேசுகிறார்கள். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், அரசியல் சாசனச் சட்டம், எல்ஐசி என எல்லாவற்றிலும் பொய்தான் பேசுகிறார்கள்.


மக்கள் அவர்களது வங்கிக் கணக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அனுதாபம் தேட புதிய நாடகத்தை அவர்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களில் பலர் ஊழல் வழக்குகளில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்து நடமாடிக் கொண்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் பொறுப்பற்ற முறையில் பேசியதற்காக மன்னிப்பு கேட்ட கதையையும் நாம் பார்த்தோம்.


நாட்டில் அமைதியின்மையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். குடியுரிமைச் சட்டம் தொடர்பாக அவர்கள் மக்களிடையே கலகத்தை ஏற்படுத்தினர்.