மோடி பரிவார்னு இனி போட வேண்டாம்.. எடுத்துருங்க.. பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை!

Su.tha Arivalagan
Jun 12, 2024,05:18 PM IST

டெல்லி:   சமூக வலைதளங்களில் தங்களது பெயர்களுடன் மோடி பரிவார் அல்லது மோடி குடும்பம் என்று இணைத்து எனக்கு ஆதரவு கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி. இனி அதை எடுத்து விடலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடியின் குடும்பம் குறித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனம் வைக்கப்பட்டது. இதற்கு மோடி பதிலளிக்கையில், இந்து நாடும், நாட்டு மக்களும்தான் எனது குடும்பம் என்று கூறியிருந்தார். இதையடுத்து பாஜகவினர் மற்றும் பாஜக அநுதாபிகள் சமூக வலைதளங்களில் தங்களது பெயருக்குப் பின்னால் இந்தியில் மோடி பரிவார் என்றும் தமிழில் மோடி  குடும்பம் என்றும் குறிப்பிட ஆரம்பித்தனர். இது வைரலானது.




இந்த நிலையில் தற்போது தேர்தல் முடிந்து விட்ட நிலையில் இந்தப் பெயர்களை எடுத்து விடலாம் என்று பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,  தேர்தல் பிரச்சாரம் முழுவதும் இந்தியா முழுவதும் மக்கள் மோடி பரிவார் என்ற பெயரை தங்களது பெயருடன் இணைத்து எனக்கு ஆதரவாக இருந்தனர். இது எனக்கு பெரும் பலத்தைக் கொடுத்தது. இப்போது இந்திய மக்களின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் 3வது முறையாக ஆட்சியமைத்துள்ளது.  மக்களுக்காகவும், தேசத்திற்காகவும் எனக்குப் பணியாற்ற மக்கள் அனுமதி அளித்துள்ளனர். 


இந்திய மக்கள் தங்களது சமூக வலைதளத்தில் இணைத்துக் கொண்ட மோடி பரிவார் என்ற பெயரை இனிமேல் எடுத்து விடலாம் என்று கருதுகிறேன். பெயர் மட்டும்தான் நீங்குகிறது. ஆனால் நமது பந்தம், இந்தியாவின் முன்னேற்றத்திற்காக இணைந்து பாடுபடப் போவது எப்போதுமே மாறாது, இறுக்கமாகவே இருக்கும் என்று கூறியுள்ளார் மோடி.