சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு.. வீரர்கள் மனைவியைக் கூட்டி வரலாம்.. But condition applied!

Su.tha Arivalagan
Feb 18, 2025,05:56 PM IST

துபாய்: துபாயில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது தங்களது மனைவியரை அழைத்து வரலாம் என்று இந்திய வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் கூடவே கிடுக்குப்பிடியான நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.


மனைவியரை கூட்டி வரலாம் என்று பிசிசிஐ அனுமதித்திருப்பதால் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் தங்களது துணையுடன் துபாய் கிளம்பவுள்ளனர். 


சமீபத்தில் நடந்த பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா கடுமையான தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து இந்திய வீரர்கள் வெளிநாடு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய கடுமையான விதிகளில் தற்போது சிறிது தளர்வைக் கொண்டு வந்துள்ளது பிசிசிஐ. அதில் ஒன்றுதான் மனைவியரை உடன் அழைத்துச் செல்லலாம் என்பது.




மனைவி குழந்தைகளுடன் இந்திய அணி வீரர்கள் வர அனுமதித்துள்ள பிசிசிஐ அதற்குப் போட்டுள்ள கண்டிஷன்தான் வினோதமாக இருக்கிறது. அதாவது ஒரே ஒரு போட்டிக்கு மட்டுமே மனைவி குழந்தைகளைக் கூட்டி வர முடியும். எந்தப் போட்டி என்று முன் கூட்டியே பிசிசிஐக்குத் தெரிவித்தால், அதற்குரிய ஏற்பாட்டை பிசிசிஐ செய்து தரும்.


இதற்கு முன்பு, 45 நாட்களுக்கு மேலான வெளிநாட்டுத்  தொடர்களின்போது  2 வாரம் வரைக்கும் குடும்பத்தினரை அழைத்துக் கொள்ள இந்திய அணி அனுமதித்து வருகிறது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறுகிய காலமே நடைபெறவுள்ளதால் ஒரே ஒரு போட்டிக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருக்கிறதாம்.


இந்திய அணி பிப்ரவரி 20ம் தேதி தனது முதல் போட்டியாக வங்கதேசத்துடன் மோதவுள்ளது. முக்கியப் போட்டியான இந்தியா பாகிஸ்தான் மோதல் பிப்ரவரி 23ம் தேதி நடைபெறும். மார்ச் 2ம் தேதி நியூசிலாந்துடன் இந்தியா மோதும். அனைத்துப் போட்டிகளும் துபாயில்தான் நடைபெறவுள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால் அது துபாயில் நடைபெறும். இல்லாவிட்டால் பாகிஸ்தானில் நடைபெறும்.