மாநில திட்ட குழுவின் அறிக்கைதான்.. தமிழக அரசுக்கான மார்க்ஷீட்.. முதல்வர் மு க ஸ்டாலின் பெருமிதம்!

Manjula Devi
Aug 06, 2024,06:27 PM IST

சென்னை:  முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் மாநில அரசின் ஐந்தாவது திட்டக் குழு கூட்டம் இன்று தொடங்கியது. அப்போது உரை நிகழ்த்திய முதல்வர் மு க ஸ்டாலின் திட்டக்குழு தான் தமிழக அரசின் மார்க்ஷீட் என பெருமையாக கூறியுள்ளார்.


தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது. இது தமிழக முதலமைச்சர்  தலைமையின் கீழ் இயங்கி வருகின்றது.  திட்டங்களின் அடிப்படையில் ஒரு முழுமையான வளர்ச்சியை எய்துவதற்கு அரசுக்கு ஆலோசனை வழங்குகின்ற ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்படுகிறது.




அந்த வரிசையில் தமிழக அரசின் ஐந்தாவது செயற்குழு கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களிடையே எந்த அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது மற்றும் அந்தத் திட்டங்களின் பயன்பாடும் குறித்தும் தீவிர ஆலோசனையின் நடத்தி அதனை கேட்டறிந்தார் முதல்வர் மு க ஸ்டாலின். 


குறிப்பாக விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மற்றும் ஆகஸ்ட் 9 முதல் அமல்படுத்த இருக்கும் தமிழ் புதல்வன் திட்டம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். 


முதல்வரின் உரையிலிருந்து:


கடந்த மார்ச் மாதம் என்னை சந்தித்த தேவேந்திரன் அவர்கள் துறை சார்ந்த 16 பக்க அறிக்கைகள் கொண்ட உரையை என்னிடம் கொடுத்தார்கள். தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு திட்டங்களும்  மக்களுக்கு எந்த வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை இந்த அறிக்கை மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த அறிக்கை தான் எங்களுக்கு தரப்படும் மார்க் சீட்டாக நான் நினைக்கிறேன். முதல்வரின் காலை உணவு திட்டம் மூலம் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் கல்வித்துறை அடைந்து வரும் வளர்ச்சி என்ன.. மருத்துவம் என்ற திட்டத்தின் வாயிலாக கிராமப்புற மக்களின் சுகாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டு இருக்கிறது.. நகர்புறங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்து வருவதால் நகர்ப்புறங்களில் வளர்ச்சி என்ன.. என்பது போன்ற தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. 


அரசின் ஒவ்வொரு திட்டங்களும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினர்களையும்  மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை முழுமை அடைந்துள்ளது என்பதை விட மகிழ்ச்சியான செய்தி வேறு எதுவும் இருக்க முடியாது. மகளிர் உரிமைத்தொகை மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகமாகியுள்ளது. கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாக உள்ளது. பெண் திட்டத்தின் மூலம் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாக உள்ளது. இப்படியாக ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு பிரிவினரையும் உயர்த்தி வருகிறது. 


இந்த தகவல்கள் எல்லாம் மக்களிடம் நேரடியாக அறிந்தாலும் புள்ளி விவரங்களுடன் நீங்கள் வழங்கி வருகிறீர்கள். இந்த திட்டக்குழு அமைக்கப்பட்டு உங்களை முதல் முறையாக சந்தித்தபோது நான் குறிப்பிட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழி பற்றி, இன உரிமை, மாநில சுயாட்சி, ஆகிய கருத்தியலுக்கு அடித்தளமிட்டது தான் திராவிட முன்னேற்றக் கழகம். நமது மாநிலத்தின் வளர்ச்சி என்பது அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார விஷயம் மட்டுமல்ல. சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், சமூகம், சிந்தனை, செயல்பாடு, கல்வி, ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும்.  அதுதான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி.


ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல சமூக ரீதியாகவும் இல்லை என்பதை உருவாக்க வேண்டும். இதே அடிப்படையில் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக எண்ணற்ற திட்டங்களை தீட்டினோம். மாநில திட்ட குழு மூலம் நான் எதிர்பார்ப்பது புதிய புதிய சிந்தனைகளை திட்ட வடிவங்களை எதிர்பார்க்கிறேன். கவனம் பெறாத துறைகளில் கவனம் செலுத்தி புதிய திட்டங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் செயல்படுத்தி வரும் திட்டங்கள் எந்த அளவுக்கு சிறப்பானது என்பது உங்கள் அறிக்கையில் சொல்கிறது. மாநிலத் திட்டக்குழுவை முதன் முதலில் தொடங்கியது தலைவர் கலைஞர் தான். ஒன்றிய அரசியல் இருப்பது போலவே தமிழகத்திலும் திட்ட குழு கொண்டு வர வேண்டும் என நினைத்ததற்கு காரணம் அனைத்து வளங்களையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் இதனை அமைத்தார். ஆட்சி சக்கரத்தை இயக்குவர்களோடு நாங்கள் இருந்தாலும் அதற்கு வழிகாட்டுவோர்களாக திட்ட குழு உள்ளது.


ஆட்சி நிர்வாகம் சொல்லும் பாதைகளை தீர்மானிப்பவர்களாக மட்டுமின்றி அதில் உள்ள நிறை குறைகளை எடுத்துச் சொல்வதாகவும் திட்டக்குழு உள்ளது. எனக்கும்  அமைச்சரவைக்கும் ஆட்சிக்கும் மிக மிக முக்கிய வழிகாட்டியாக திட்டக்குழு உள்ளது எனக்கூறி, திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா என்பது குறித்தும் அமைச்சர்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.