சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமானங்கள் இயக்க திட்டம்.. பயணிகள் மகிழ்ச்சி..!
சென்னை: சென்னையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருச்சி இடையே இரு மார்க்கமாக கூடுதல் விமான சேவைகள் இயக்கப்பட இருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விமான சேவைகளை வழங்கும் நகரமாக தூத்துக்குடி திகழ்கிறது. அதாவது தூத்துக்குடி மிகப்பெரிய தொழிற்சாலைகள், துறைமுகம், என இருப்பதால் இங்கு பஸ், ரயில், கப்பல், விமானம் என நான்கு போக்குவரத்து வசதிகளும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் தென் மாவட்டங்களுக்கு மையமாக இருக்கும் திருச்சி சர்வதேச விமான நிலையத்திலும் வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்களின் வசதிக்காக அடுத்தடுத்த புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சென்னை விமான நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு மக்கள் விமானத்தில் அதிகளவு பயணம் செய்து வருகின்றனர். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட தென் மாவட்ட மக்களும் தூத்துக்குடி விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தென் மாவட்டங்களில் கூடுதல் ரயில் சேவைகள் இல்லாத காரணத்தால், தென் மாவட்டங்களுக்கு கூடுதல் விமான சேவையை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று தற்போது பயணிகளின் தேவைக்கேற்ப சென்னையில் இருந்து திருச்சி மற்றும் தூத்துக்குடிக்கு இரு மார்க்கமாக கூடுதல் விமானங்களை இயக்க இருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதன்படி, சென்னை டூ தூத்துக்குடி இடையே தற்போது 8 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் 30 முதல் கூடுதலாக 12 விமானங்களாக உயர்த்தப்படுகிறது. அதேபோல் சென்னை டூ திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் 14 விமானங்களில் இருந்து, தற்போது மார்ச் 22 ஆம் தேதி முதல் 16 விமானங்களாக உயர்த்தப்பட்டு விமான சேவை இயக்கப்பட உள்ளது.