ஒரே இரவில் நடக்கும் கதை.. 23 மணி 23 நிமிடங்களில் எடுக்கப்பட்ட படம்.. பிதா படம் சாதனை!

Manjula Devi
Jul 20, 2024,12:38 PM IST

சென்னை: ஒரே இரவில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ள பிதா திரைப்படம், இந்திய திரைப்பட வரலாற்றில் 23 மணி நேரம் 23 நிமிடத்தில் எடுத்து முடிக்கப்பட்ட முதல் சாதனை திரைப்படம் ஆகும்.


எஸ் ஆர் பிலிம் பேட்டரி சிவராஜ் தயாரிப்பில் உருவான பிதா திரைப்படத்தை, எஸ்  சுகன் இயக்கியுள்ளார். இப்படம் மூலம் சுகன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் இதுவரையில் 8 குறும்படங்களை இயக்கியவர். பின்னர் டான்ஸ் மாஸ்டர் கலாவிடம் ஆறு ஆண்டுகள் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். தொடர்ந்து இயக்குனர் ரமேஷிடமும் துணை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். சிறு முதலீடு செய்யப்பட்டு தரமான திரைப்படங்களை தொடர்ந்து வெளியிடப்படும் ஆக்சன் ரியாக்ஷன் சார்பில் உலகமெங்கும் பிதா படத்தை வெளியிடுகிறார் ஜெனீஷ். இப்படத்திற்கு இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, நரேஷ் இசையமைத்துள்ளார்.




இதில் மதி அறிமுக நாயகனாக நடித்துள்ளார். இவருடன் ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரிஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர்.


காது கேளாத, வாய் பேச முடியாத, 10 வயது சிறுவன் கடத்தப்பட்ட தொழில் அதிபரையும் தனது அக்காவையும் திருவிழா பெருங்கூட்டத்தில் எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை. இந்த கதை களத்தை மங்காத்தா, சூது கவ்வும் பட பாணியில் விறுவிறுப்பாக எஸ். சுகன் இயக்கி உள்ளாராம். மேலும் ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் திருவிழா கூட்டத்தில் திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் இயக்குனர் சுகன்.




இந்த நிலையில் இந்திய திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்த பிதா திரைப்படத்தை ஆக்சன் ரியாக்சன் ஜெனீஷ் நிறுவனம் வரும் ஜூலை 26ஆம் தேதி உலகெங்கும் வெளியிடவுள்ளது.


1999 ஆம் ஆண்டு பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் நடிப்பில் உருவான சுயம்வரம் திரைப்படம் 23 மணி நேரம் 58 நிமிடங்களில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படம் கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் இடப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.