குண்டு வீசச் சொன்னது யார்.. உண்மையைக் கக்குவாரா.. கருக்கா வினோத்?.. காவலில் எடுக்கும் போலீஸ்!

Meenakshi
Oct 27, 2023,06:00 PM IST

சென்னை: ஆளுநர் மாளிகை வாசல் அருகே பெட்ரோல்  குண்டு வீசிக் கைதான ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுக்க போலீஸார் கோர்ட்டில் மனு செய்துள்ளனர்.


சென்னை தேனாம்பேட்டை பகுதியை  சேர்ந்தவர் ரவுடி கருக்கா வினோத்.  இவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில்தான் இவர் ஜாமீனில் விடுதலையாகி வந்தார். வந்தவர், நேராக ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டை வீசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.


கடந்த 25ம் தேதி இவர் பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகையின் வாயிலில் வீசியுள்ளார். தனி ஆளாக வந்து துணிச்சலாக இவர் பெட்ரோல் குண்டு வீசியது பல்வேறு  கேள்விகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.  கருக்கா வினோத்தை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.




தற்போது ரவுடி கருக்கா வினோத்தை விசாரிக்க காவல் துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.  போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை பெருநகர காவல் துறை சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. 


கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் அவர் எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார், யார் சொல்லி செய்தார், யாராவது இவருக்குப் பின்னணியில் உள்ளனரா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும்.. பல குழப்பங்கள் நீங்கும் என்பதால் கருக்கா வினோத் போலீஸ் காவலில் சொல்லப் போகும் தகவல்களுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.