இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு உளவியல் பரிசோதனை தேவை.. மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு

Meenakshi
Jan 03, 2024,02:51 PM IST

மதுரை: லியோ படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளது. இப்படத்தைத் தடை செய்ய வேண்டும். படத்தை இயக்கிய,  இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


விஜய், த்ரிஷா நடித்து வெற்றி பெற்ற படம் லியோ. இந்த படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தில் வன்முறை காட்சிகள் நிறைந்துள்ளது என கூறி, லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவு விட வேண்டும் என்று  மதுரையைச் சேர்ந்த ராஜு முருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.


அந்த மனுவில் லியோ படத்தில் உள்ள பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிப்பதோடு, பெரும்பாலும் ஆயுத கலாச்சாரமும், மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி முரண்பாடான கருத்துக்களையும், போதைப்பொருள் பயன்பாடு, பெண்கள் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்ற கருத்தை விதித்தல் உள்ளிட்ட காட்சிகளை லோகேஷ் கனகராஜ் காட்சிப்படுத்தியுள்ளார். 




இது மட்டுமின்றி கலவரம், சட்டவிரோத செயல்கள், போதைப்பொருள் வியாபாரம், துப்பாக்கிகளை பயன்படுத்துதல், காவல்துறை உதவி உடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என்று சமூக விரோத கருத்துக்களை லியோ படத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர். இது போன்ற படங்களை தணிக்கை துறையினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் முறையாக உளவியல் பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும், இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப்படி வழக்கு பதிவு செய்து லியோ படத்தை முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 


இந்த மனு  உயர்நீதி மன்ற மதுரை கிளையில்  இன்று விசாரணைக்கு வந்தது.நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதனால் இந்த  வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.