கிலோ ரூ.60 தக்காளியை வாங்க 5 மணி நேரம் காத்திருந்த மக்கள்

Aadmika
Aug 06, 2023,10:19 AM IST
சென்னை : கிலோ ரூ.60 என்ற விலைக்கு கூட்டுறவு மையங்களில் விற்கப்படும் தக்காளியை வாங்குவதற்காக சென்னை மக்கள் 5 மணி நேரம் காத்திருந்து வாங்கி சென்று வருகின்றனர்.

தக்காளி விலை நாடு முழுவதும் தாறுமாறாக ஏறிக் கொண்டே செல்கிறது. கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.160 முதல் 180 வரை உயர்ந்தது.

தென்மாநிலங்கள் பரவாயில்லை என்னும் சொல்லும் அளவிற்கு வட மாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.250 ஐயும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 

தக்காளி விலை உயர்வின் காரணமாக தக்காளி ஏற்றி வரும் லாரியையே கடத்திய சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளது. இந்நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் பல வழிகளிலும் முயன்று வருகின்றன. சந்தைகள், கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் சாமானிய மக்களின் கஷ்டங்களை போக்குவதற்காக குறைந்த விலைக்கு அரசு கூட்டுறவு மையங்கள் மூலமும், ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்ய மாநில அரசுகள் ஏற்பாடு செய்துள்ளன.



சென்னையில் 5 இடங்களில் உள்ள கூட்டுறவு மையங்களில் ரூ.60 என்ற விலைக்கு ஒரு கிலோ தக்காளி விற்கப்பட்டு வருகிறது. இதனை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ராயப்பேட்டையில் உள்ள கூட்டுறவு மையத்தில் ரூ.60 க்கு தக்காளி வாங்குவதற்காக நூற்றுக்கும் அதிகமான மக்கள் 5 மணி நேரத்திற்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றுள்ளனர்.

இதற்கிடையில் சென்னையில் தற்போது தக்காளி விலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.160 க்கு விற்கப்பட்ட தற்காளி விலை தற்போது குறைந்து ரூ.100 என்ற அளவை எட்டி உள்ளது. இருந்தாலும் பல இடங்களில் அதிக விலைக்கே தக்காளி விற்கப்படுவதால் மக்கள் வேறு வழியின்றி கூட்டுறவு மையங்களில் ரூ.60 க்கு விற்கப்படும் தக்காளியை வாங்குவதற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.