பவன் கல்யாணின் இளைய மகள் பொலினா.. திருப்பதி கோவில் டிக்ளரேஷனில் கையெழுத்திட்டது ஏன்?

Su.tha Arivalagan
Oct 02, 2024,12:09 PM IST

திருப்பதி:   ஆந்திர மாநில துணை முதல்வரும், சிறந்த நடிகருமான பவன் கல்யாண் தனது இரு மகள்களுடன் திருப்பதிக்கு இன்று விஜயம் செய்தார். அப்போது அவரது இளைய மகள் பொலினா அஞ்சனா பவனோவா, திருப்பதி தேவஸ்தான பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு விட்டு பின்னர் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்.


ஆந்திர மாநில துணை முதல்வராக இருப்பவர் ஜன சேனா கட்சித் தலைவரான பவன் கல்யாண். இவர் சிறந்த நடிகரும் கூட. அரசியலுக்கு வந்த பிறகும் கூட, துணை முதல்வரான பிறகும் கூட நடிப்பை கைவிட மாட்டேன் என்று கூறி வருபவர். இந்த நிலையில் திருப்பதி லட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து 11 நாட்கள் விரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். மேலும் திருமலைக்கு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.


அதன்படி தற்போது அலிபிரி பாதை வழியாக நடந்தே திருமலைக்கு வந்து சேர்ந்துள்ளார் பவன் கல்யாண். அவரது மகள்கள் ஆத்யா மற்றும் பொலினா அஞ்சனா பவனோவா ஆகியோரும் அவருடன் வந்துள்ளனர். திருப்பதிக்கு வந்த பவன் கல்யாணம் அங்குள்ள திருப்பதி தேவஸ்தான  அலுவலகத்தில் சற்று ஓய்வெடுத்தார். அந்த சமயத்தில், தேவஸ்தானம் சார்பில் தரப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் அவரது இளை மகள் பொலினா கையெழுத்திட்டார். அதேபோல பவன் கல்யாணும் அதில் கையெழுத்திட்டார்.




இதற்குக் காரணம் உள்ளது.. .திருப்பதிக்கு வரும் பிற மதத்தவர்கள், தங்களுக்கு ஏழுமலையான் மீது நம்பிக்கை இருப்பதாக உறுதிமொழி தர வேண்டும். அப்போதுதான் அவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். சரி, இதற்கும் பவன் கல்யாண் மகளுக்கும் என்ன சம்பந்தம்.. பவன் கல்யாண் இந்துதானே என்று கேள்வி எழும்.. பவன் கல்யாண் இந்துதான்.. ஆனால் அவரது இளைய மகள் பொலினா இந்து கிடையாது. மாறாக தனது தாயாரின் மதமான கிறிஸ்துவத்தைப் பின்பற்றுகிறார். 


குழப்பமாக இருக்கிறதா...?


பவன் கல்யாணுக்கு மொத்தம் 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் ரேணு தேசாய். அவர் மூலம் பவன் கல்யாணுக்கு ஆத்யா மற்றும் அகிரா நந்தன் என இரு குழந்தைகள் உள்ளனர்.  ரேணு தேசாயை பின்னர் விவாகரத்து செய்து விட்டார் பவன் கல்யாண். அதன் பிறகு ரஷ்யாவைச் சேர்ந்த அன்னா லெஷ்னிவா என்ற பெண்ணை 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர் மூலமாக பொலினா அஞ்சனா பவனோவா மற்றும் மார்க் சங்கர் பவனோவிச் என இரு பிள்ளைகள் உள்ளனர்.


ரேணு தேசாயின் பிள்ளைகள் இருவரும் இந்துக்கள். அதேசமயம், அன்னா லெஷ்னிவாவின் பிள்ளைகள் இருவரும் தாய் வழி மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இதனால்தான் திருப்பதி கோவிலுக்கு வந்த பொலினா, டிக்ளரேஷன் படிவத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தார். அவருக்கு மைனர் வயது என்பதால், தந்தை  பவன் கல்யாணும் இந்தப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். எனவே அவரும் கையெழுத்திட்டுள்ளார்.


தனது இரு மகள்களுடனும் திருப்பதிக்கு வந்த பவன் கல்யாணின் புகைப்படங்களை அவரது கட்சியினர் வைரலாக்கி வருகின்றனர். முன்னதாக திருமலைக்கு படி மீது ஏறி வந்தபோது மூச்சு வாங்கியபடி ஒரு இடத்தில் பவன் கல்யாண் அமர்ந்திருந்த வீடியோவும் வைரலானது. இருப்பினும் தனது முயற்சியை விடாமல் நடந்தே மலைக்கு வந்து சேர்ந்துள்ளார் பவன் கல்யாண்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்