சொன்னதைச் செய்தார் கமின்ஸ்.. திட்டம் போட்டு இந்தியாவின் கனவைத் தகர்த்தார்.. ரசிகர்கள் அப்செட்!

Su.tha Arivalagan
Nov 19, 2023,09:53 PM IST

அகமதாபாத்: "நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குழுமும் 1 லட்சம் ரசிகர்களையும் முதலில் நாங்கள் அமைதிப்படுத்த வேண்டும்.. பிறகுதான் வெற்றி பற்றி யோசிப்போம்" என்று ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியிருந்தார். அதை உண்மையாக்கி இன்று அதிரடியாக ஆஸ்திரேலியா வென்று விட்டது.. மொத்த இந்தியர்களின் இதயமும் நின்று போய் விட்டது.


ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சும் சரி, பீல்டிங்கும் சரி அட்டகாசமாக இருந்தது இன்றைய அவர்களது இன்னிங்ஸில். மிகமிக டைட்டாக பந்து வீசினார்கள் ஆஸ்திரேலிய பவுலர்கள். அதை தகர்த்து உள்ளே புகுந்து அடித்து ரன் எடுத்தது ரோஹித் சர்மாவும், கோலியும் மட்டுமே. இருவரும் அதிரடி காட் தைரியமாக ஆடினர்.




ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சுப்மன் கில் முதலில் வீழ்ந்தார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார். அடுத்து ரோஹித் சர்மா போனார், அவரைத் தொடர்ந்து இப்போது விராட் கோலியும் வெளியேறி விட்டார். விராட் கோலியை அவுட்டாக்கியது பேட் கம்மின்ஸ். அவர் வீசிய பந்தை அடித்து விட்டு ஓட முயன்றார் விராட் கோலி. ஆனால் பந்து வேகமாக பின்னால் போய் ஸ்டம்ப்பைத் தகர்த்து விட்டது. விராட் கோலி அவுட் ஆனதும் மொத்த மைதானமும் பின் டிராப் சைலன்ஸுக்குப் போய் விட்டது. விராட் கோலி உள்பட மொத்தப் பேரும் உறைந்து போய் விட்டனர்.


ஆஸ்திரேலியாவின் பவுலிங் உத்தி அட்டகாசமாக இருந்தது. அதேபோல பீல்டிங்கிலும் அசத்தி விட்டனர். சின்னச் சின்ன ரன்களை எடுப்பதே இந்தியாவுக்கு சிரமமாக இருந்தது. பவுண்டரிகளை விளாசுவது அதை விட சிரமமாக போனது. அபாரமாக இருந்த இந்தியாவின் ரன் ரேட்டை கடுமையாக போராடி குறைத்து திணறடித்து விட்டது ஆஸ்திரேலியா.


மிகவும் தெளிவாக திட்டமிட்டு ஆடி இந்தியாவை வென்றுள்ளது ஆஸ்திரேலியா. கூடியிருந்த மொத்தம் 1.3 லட்சம் ரசிகர்களின் குரல் பலம் இந்தியாவுக்கு இருந்தபோதும் கூட அது ஆஸ்திரேலியாவை முடக்க முடியவில்லை. கடைசியில் கமின்ஸ் சொன்னதைச் செய்து விட்டார்.. இந்தியர்களின் தூக்கத்தையும் கெடுத்து விட்டார்.


பரவாயில்லை.. கிரிக்கெட்தானே வென்றுள்ளது.. வாழ்த்துவோம் ஆஸ்திரேலியாவை!