நெல்லை டூ தூத்துக்குடி பாசஞ்சர்.. இனி கிடையாது.. முற்றிலும் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Manjula Devi
Aug 19, 2024,12:08 PM IST

நெல்லை:   திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


நெல்லையிலிருந்து தூத்துக்குடி வரை தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் நெல்லையில் இருந்து புறப்பட்டு கங்கைகொண்டான், வாஞ்சி மணியாச்சி, தட்டப்பாறை வழியாக தூத்துக்குடி சென்றடையும். இந்தப் பயணிகள் ரயில் தினமும் நெல்லையிலிருந்து காலை 7.35 மணிக்கு புறப்படும். அதேபோல் மறு மார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து 6.25 மணிக்கும் புறப்படும்.




இதற்கிடையே பாலக்காடு டூ நெல்லை வரை இயக்கப்பட்டு வரும் பாலருவி  என்ற எக்ஸ்பிரஸ் தற்போது தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் நெல்லை- தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் பிரதி ஞாயிறு தோறும் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.


தற்பது இன்று முதல் நெல்லை டூ தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  மறு அறிவிப்பு வரும் வரை நெல்லை டூ தூத்துக்குடி இடையே ரயில் சேவை இயக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெல்லை வழியாக தூத்துக்குடி செல்லும் இந்தப் பயணிகள் ரயிலின் கட்டணம் மிகக் குறைவு என்பதால் பல கிராம மக்கள் பயனடைந்து வந்தனர். குறிப்பாக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொண்டு வரும் பொருட்களை எளிதாக கொண்டு செல்ல இந்த பயணிகள் ரயில் சேவை மிகவும் பேருதவியாக இருந்து வந்தது. தற்போது நெல்லை டூ தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில் சேவை  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட செய்தி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்