"செத்துதான் என்ன செய்யப் போகிறோம்... வாழ்ந்துதான் தொலையலாமே".. பார்த்திபன் உருக்கம்

Su.tha Arivalagan
Sep 20, 2023,10:31 AM IST
சென்னை: வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம்.. செத்துத் தொலையலாமே.. செத்துதான் என்ன செய்யப் போகிறோம்.. வாழ்ந்தே தொலையலாமே.. ஒரு வாழ்க்கைதான்.. அதை நன்றாக வாழ வேண்டும்.. இதை குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும் என்று இயக்குநர் - நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவுக்கு ஏற்பட்ட துயரம் அனைவரையும் உலுக்கிப் போட்டுள்ளது. தங்களது வீட்டிலேயே இப்படி ஒரு துக்கம் நடந்து விட்டது போல மக்கள் தவித்துப் போயுள்ளனர். குறிப்பாக பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

உயிரை மாய்க்கும் வயதா இது.. 16 வயதில் அப்படி என்ன வேதனை ஒரு பெண்ணுக்கு வந்து விட முடியும்.. உயிரை விடத் துணியும் அளவிலான சூழல் எப்படி ஏற்பட்டது என்று ஒவ்வொருவரும் விவாதித்துக் கொண்டுள்ளனர்.



மிகவும் தைரியமான பெண்ணாகத்தான் அந்தக் குழந்தை இருந்துள்ளது. ஸ்கூல் பீப்பிள் லீடராக இருந்துள்ளார். ஓரளவு நன்றாகவும் படிக்கக் கூடியவர்தான். அருமையான அப்பா, அம்மா.. அருமையான ஸ்கூல் என்று நல்ல சூழலில்தான் இருந்துள்ளார். அதையும் தாண்டி அவரை தற்கொலைக்குத் தூண்டிய காரணி என்ன என்பதுதான் அனைவருக்கும் வேதனையாக உள்ளது.

இந்த நிலையில் இயக்குநர் பார்த்திபன் கண்ணீர் மல்க ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனி வீட்டுக்கு வந்து மீராவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெண் குழந்தைக்கு கல்யாணம் ஆகிப் போகும் போதே நம்மால் தாங்க முடியாது. இது கொடுமையான பிரிவு. மன உளைச்சல், மன அழுத்தம் எல்லோருக்கும்தான் உள்ளது. எங்க இண்டஸ்ட்ரில நிறையவே இருக்கு. 

ஸ்கூலில் மாணவர்கள் எண்ணிக்கையைக் குறைத்து விட்டு ஒவ்வொரு குழந்தையையும் நேரடியாக பார்ப்பது போல மாற்ற வேண்டும். பெற்றோரை விட ஆசிரியர்களுடன்தான்,  நண்பர்களுடன்தான் குழந்தைகள் அதிக நேரம் இருக்கிறார்கள். பள்ளியில் வேற மாதிரியான சூழல் இருக்கிறது. நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள்.

இந்தக் குழந்தை போல்டானவர்னு சொல்றாங்க. ஆனால் உள்ளுக்குள் என்ன மாதிரியான கஷ்டம் இருந்துச்சுன்னு தெரியலை. விஜய் ஆண்டனியும், அவரது மனைவியும் ரொம்ப மென்மையானவர்கள். அவர்களிடம் பிரச்சினையைச் சொல்லியிருந்தால் நிச்சயம் சரி செய்திருப்பார்கள்.

எதிர்காலத்தில் இதுபோல நடக்காமல் இருக்க  குழந்தைகளுக்கு தைரியம் ஊட்ட வேண்டும். எக்ஸாம் பயம் உள்பட எல்லா பயத்தையும் தூக்கிப் போடு.. வாழ்க்கை ஒன்றுதான். அதை நன்றாக வாழ வேண்டும் என்பதை நாம் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும் என்றார் பார்த்திபன்.

பார்த்திபன் வெளியிட்டிருந்த ஒரு டிவீட்டில் இதையே வலியுறுத்தியுள்ளார். அந்த டிவீட்:

“வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம்
செத்துத் தொலையலாமே!
செத்துதான் என்ன செய்யப் போகிறோம்
வாழ்ந்தேத் தொலையலாமே”
எழுத்தை விட,
சோகம் அப்பிக்கொண்ட உணர்ச்சி மிகு குரலுக்கு வலிமை அதிகம்.
பெற்றோர்களுடன் குழந்தைகளும்
நண்பர்களோடு சில வலிகளும் பகிரட்டும்.
வீட்டுக்கு வந்துவிட்டேன் …
ஆனால் மீராவிடமிருந்து மீளாமல் அந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த விஜய் ஆண்டனியை ஆறுதல் சொல்கிறேன் என அவருடைய உணர்வு உடையாமல் ஓரமாக நின்று 
பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்-ஆனால்
என் வீட்டுக்கு வந்துதான் விட்டேன்"