மணிப்பூர் பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. இரு அவைகளும் ஒத்திவைப்பு

Aadmika
Jul 20, 2023,11:23 AM IST
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் இன்று துவங்கிய நிலையில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20 ம் தேதியான இன்று துவங்கி, ஆகஸ்ட் 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 31 மசோதாக்கள் குறித்த விவாதங்கள் நடத்தப்பட உள்ளது. புதிய பார்லிமென்ட் கட்டிடத்தில் நடக்கும் முதல் கூட்டத் தொடர் இதுவாகும். ராஜ்யசபாவில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மசோதாக்கள் மீதான விவாதமும் நடைபெற உள்ளது. 

இன்று காலை இரு அவைகளும் கூடிய போது இரங்கல் குறிப்புகள் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து லோக்சபா பிற்பகல் 2 மணி வரையிலும், ராஜ்யசபா பிற்பகல் 12 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் மணிப்பூர் வன்முறை, வெள்ளம், டெல்லி மசோதா, அதானி விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை கையில் எடுத்து மத்திய அரசை குற்றம்சாட்ட எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன. பல்வேறு கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை பெரிதாக கிளப்பத் திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக ஏற்கனவே ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸையும் கொடுத்துள்ளன.

திமுக சார்பில் ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக பிரச்சினையைக் கிளப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதை நேற்றே டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறி விட்டார்.  இதனால் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே அமளி, கூச்சல் குழப்பம், வெளிநடப்பு, அனல் பறக்கும் விவாதங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக எதிர் பார்க்கப்படுகிறது. 

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து "இ.ந்.தி.யா" என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இவர்கள் மேற்குவங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது நடந்த வன்முறை, பலர் உயிரிழந்த விவகாரம், மோதல் ஆகியவற்றை வைத்து பிரச்சனையை கிளப்பு முடிவு செய்துள்ளன. 

மழைக்கால கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்னதாக எதிர்க்கட்சிகள், ராஜ்யசபாவிற்கான எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவை காலை 10 மணிக்கு சந்தித்து பேச உள்ளன. கூட்டத்தொடரின் முதல் நாளில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.