தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள்.. இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

Meenakshi
Jan 22, 2024,06:59 PM IST

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டுள்ளார்.


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற, நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. 18வது மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.


ஓவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளை தற்பொழுது தொடங்கி விட்டன. இந்நிலையில்  நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையமும் தீவிர காட்ட தொடங்கி விட்டன.நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டுள்ளார்.




தமிழகத்தில் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை தலைமை செயலகத்திலிருந்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு இன்று வெளியிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.14 கோடி பெண்கள் ஆவர்.  3.03 கோடி ஆண் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். 8,294 மூன்றாம் பாலின வாக்காளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். 


தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை சோழிங்கநல்லூர் உள்ளது. இந்தத் தொகுதியில், 6.60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதி இரண்டாம் இடத்தில் உள்ளது.  தமிழ்நாட்டிலேயே சிறிய தொகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி 1.72 லட்சம் வாக்காளர்களுடன் உள்ளது.




தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட தற்போது கூடுதலாக 7 லட்சம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர்கள் இதனை வெளியிட உள்ளனர். வேட்பு மனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரையிலும் வாக்காளர்கள் பட்டியலில் பெயரை சேர்க்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.