3வது மோடி அரசின்.. முதல் பட்ஜெட் கூட்டத் தொடர்.. இன்று கூடுகிறது.. நாடாளுமன்றம்!

Manjula Devi
Jul 22, 2024,10:43 AM IST

டெல்லி:   நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று டெல்லியில் தொடங்குகிறது. நாளை மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.


லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1  வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வென்று, ஜூன் 9ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 3வது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்தது.




அதன் பின்னர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் முதல் கூட்டத் தொடர் நடந்தது. அந்தக் கூட்டத் தொடரிலேயே இந்தியா கூட்டணி எம்.பிக்கள் அதிர வைத்தனர். குறிப்பாக ராகுல் காந்தியின் பேச்சு படு அதிரடியாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடியும் பதிலடி கொடுக்கவே முதல் கூட்டமே பரபரப்பாக முடிந்தது.


இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில்  பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  இன்று தாக்கல் செய்கிறார். இதைத் தொடர்ந்து 2024- 25 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். இது அவருக்கு ஏழாவது பட்ஜெட் தாக்கல் ஆகும்.


முன்னதாக  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சமூகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜே.பி நட்டா, கிரண், ரிஜிஜு, காங்கிரஸ் சார்பில் எம்பிக்கள் ஜெயராம் ரமேஷ், கவுரவ் கோகோய், திமுக சார்பில் டி ஆர் பாலு, திருச்சி சிவா, திருமாவளவன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நீட் தேர்வு விவகாரம், தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு, காவிரி நீர் பங்கீடு, சாதிவாரி கணக்கீடு, மதுரை எய்ம்ஸ் போன்ற பிரச்சினைகளை விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் திமுக கோரிக்கை விடுத்தது.


இந்தக் கூட்டத் தொடரிலும் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது. காரணம் இந்தியா கூட்டணிக் கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பக் காத்துள்ளன. தமிழ்நாட்டு எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், கலாநிதி வீராச்சாமி ஆகியோர் இன்றைய கேள்வி நேரத்தில் நீட் தேர்வு முறைகேடு குறித்து கேள்வி எழுப்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்  என இந்தியா கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி போராட்டத்தில் குதிக்கவும் வாய்ப்புள்ளது.


பிரதமர் மோடி கோரிக்கை:


முன்னதாக நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சமூகமாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்தக் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நான் நம்புகிறேன். நாளை தாக்கல் செய்யப்படும் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் நல்ல காலத்துக்கு வழிகாட்டும். 


2047ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தொலைநோக்கு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. அடுத்த ஐந்தாண்டுகளுக்கான செயல்திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. நாட்டு மக்களின் தேவையும் நலனையும் கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.