பாரிஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஹிஜாப் அணிந்த பெண்ணை சுட்ட போலீஸ்.. ஏன்?

Su.tha Arivalagan
Nov 01, 2023,11:22 AM IST

பாரிஸ்: பாரிஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர்  அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பயணிகள் கூறிய புகாரைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸார் அந்தப் பெண்ணைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் கட்டுக்குள் வராததால் அவரை சுட்டுப் பிடித்தனர்.


பாரீஸில் உள்ள பிப்லியோத்திக் பிரான்காய்ஸ் - மிட்டரன்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு ஹிஜாப் அணிந்த பெண் அங்கிருந்த பெண்களை மிரட்டும் தொனியில் பேசிக் கொண்டிருந்தார். நீங்கள் எல்லாம் சாகப் போகிறீர்கள் என்று கூறிக் கொண்டிருந்தார். அல்லா ஹு அக்பர் என்றும் கோஷமிட்டபடி இருந்தார்.


இதையடுத்து அங்கிருந்த பயணிகள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்தப் பெண்ணை தனி இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரை அமைதியாக இருக்குமாறு கூறினர். பின்னர் அவரிடம் பெண் போலீஸார் மூலம் சோதனை நடத்தப்பட்டது. அவரிடம் ஏதேனும் அபாயகரமான பொருட்கள் இருக்கிறதா என்று சோதனையிட்டனர்.




ஆனால் அந்தப் பெண் போலீஸாரின் கட்டுப்பாட்டை மீற தொடர்ந்து முயற்சி செய்தார். அல்லா ஹு  அக்பர் என்று தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தார். இதையடுத்து அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.


அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெடிப்பொருட்கள்  எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று பாரிஸ் காவல்துறை தலைவர் லாரன்ட் நுனேஸ் கூறினார். தங்களின் சொந்த பாதுகாப்புக்காக தான் போலீஸார் ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்று காவல்துறை விளக்கியுள்ளது.


போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் அப்பெண்ணின் வயிற்றில் தோட்டா பாய்ந்தது. தீயணைப்புத்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை மாற்றி அனுமதித்துள்ளனர்.  இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக சில மணி நேரங்கள் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


இஸ்ரேல் - ஹமாஸ் மோதலைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்கள் வலுத்துள்ளன.  பிரான்சிலும் பெரியஅளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தப் பெண்ணும் பாலஸ்தீன ஆதரவாளராக இருப்பார் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.