நிறைய கனவு இருக்கு.. அந்த ஆசையும் எனக்குள் நிறையவே இருக்கு.. சங்கீதா கல்யாண்குமார் பளிச் பேச்சு!

Manjula Devi
Sep 12, 2024,02:01 PM IST

சென்னை: பராரி படத்தில் நடித்து வரும் நடிகை சங்கீதா கல்யாண் குமார் வெற்றிமாறன், செல்வராகவன், சுதா கொங்கரா, லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களுடன் பணியாற்றுவதே எனது கனவு என்று கூறியுள்ளார்.


பக்கத்து வீட்டுப் பெண் என்ற உணர்வை ஒரு சில நடிகைளே ரசிகர்களுக்கு தருவார்கள். இதில் நடிகை சங்கீதா கல்யாண் குமாரும் ஒருவர். தமிழ் சினிமாவில் சந்தானம் நடிப்பில் வெளியான  80ஸ் பில்டப் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் சங்கீதா கல்யாண் குமார். இதனை தொடர்ந்து தற்போது ராஜ முருகனின் தயாரிப்பில் எழில் பெரிய வாடி இயக்கிய பராரி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. 




இப்படத்தில் அவரது அற்புதமான, இயல்பான தோற்றம், திரை ஈர்ப்பு நடிப்பு ஆகியவை ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் விரைவில் வெளிவர தயாராக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் சங்கீதா கல்யாண் குமார் நிச்சயம்  ரசிகர்களின் பாராட்டுகளை பெறுவார் என்பது சந்தேகமில்லை என கூறுகின்றனர்.  தனது திரையுலக பயணம் குறித்து சங்கீதா கூறுகையில், 




ஒரு நடிகை ஹீரோயினாக மட்டுமே படத்தில் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.கதைக்கு தேவைப்படும் வலுவான கதாபாத்திரங்களிலும் நடிக்கலாம். வெற்றிமாறன், செல்வராகவன், சுதா கொங்கரா, லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், போன்ற இயக்குனர்கள் பல நடிகைகளுக்கு இது போன்ற நம்பிக்கை கூறிய கதாபாத்திரங்களை கொடுத்துள்ளனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனது கனவு.


கார்கி, மகாநதி, அருந்ததி, சீதாராமம் போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த திரைப்படங்கள் ஒருபோதும் பழையதாகாது. வருடங்கள் செல்லச் செல்ல இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். இந்த படங்களில் நடிகைகள் சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா ஷெட்டி, மற்றும் மிர்ணால் தாக்கூர் ஆகியோர் தங்களின் நடிப்பின் மூலம் இந்த படங்களில் மாயாஜாலம் நிகழ்த்தி இருக்கின்றனர். எந்த நடிகைக்கும் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். எனக்கும் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்