ஏஐ அவதார்.. இப்படியும் பயன்படுத்தலாம்.. 20 ஆண்டுக்குப் பிறகு பேசிய பெண்.. சபாஷ்!

Aadmika
Aug 26, 2023,03:00 PM IST

நியூயார்க் : முதன் முறையாக ஏஐ .,யில் உள்ள அவதார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண்ணை பேச வைத்து வெற்றி பெற்றுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.


அமெரிக்காவை சேர்ந்த அன் (Ann) என்ற 47 வயதாகும் பெண், 18 ஆண்டுகளுக்கு முன் மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிக்கப்பட்டதால் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் பேசும் திறனையும் அன் இழந்தார். இவரை பற்றி அறிந்த Kaylo Littlejohn தலைமையிலான UCSF டீம் அவருக்கு உதவ முன் வந்தனர். 




அன்னின் மூளைக்குள் எலக்ட்ராய்டுகளை செலுத்தி, அவரது மூளையில் இருந்து வரும் சிக்னல்கள் உள்வாங்கி, அவரது எண்ணங்களை பேச்சாக மொழிபெயர்த்துள்ளனர். ஏஐ.,யின் அவதார் தொழில்நுட்ப உதவியுடன் இதை செய்து ஆராய்ச்சியாளர்கள் தங்களின் சோதனையில் வெற்றி பெற்றுள்ளனர்.


பல வாரங்கள் நடந்த ஆய்விற்கு பிறகு ஏஐ முறையில் அன்னின் குரலை மீண்டும் அனைவரும் கேட்க வைத்ததுடன், அவர் உலகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவி உள்ளனர். இதனால் கிட்டதட்ட 20 வருடங்களுக்கு பிறகு அன் தனது குரலை தானே கேட்டுள்ளார். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல நோயாளிகளுக்கு உதவ முடிவு செய்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 


ஏஐ தொழில்நுட்பத்தால் உலகில் பலரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவரை மற்றவர் போல் மாற்றியும், வயதான ஒருவரின் தோற்றத்தை அப்படியே இளமையாக மாற்றியும் வீடியோ வெளியிட்டு அனைவரையும் அசற வைப்பதுடன், லைக்குகளையும், பாராட்டுக்களையும் அள்ளி வருகின்றனர்.




இப்படி ஏஐ எனப்படும் செயற்கை நுண்திறன் தொழில்நுட்பத்தை பலரும் சாதாரண விஷயங்களுக்காக பயன்படுத்தி வரும் நிலையில் ஆராய்ச்சியாளர்கள் பலர் மருத்துவ துறை சாராமல், பல நோயாளிகளின் திறமைகளை மீட்டெடுப்பது, அவர்கள் இழந்த திறன்களை மீட்டுத் தருவது என சவாலான விஷயங்களை செய்ய துவங்கி, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.