தொடர்ந்து 3 பாரா ஒலிம்பிக் போட்டிகளில்.. மாரியப்பன் தங்கவேல்.. பதக்கம் வென்று சாதனை!

Manjula Devi
Sep 04, 2024,10:45 AM IST

பாரிஸ்: தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல் தொடர்ந்து மூன்றாவது வருடமாக பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் மாரியப்பனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆறாவது நாளான நேற்று தீப்தி ஜீவன்ஜி, ஷரத் குமார், மாரியப்பன் தங்கவேலு, அஜீத் சிங், சுந்தர் குர்ஜார் ஆகியோர் இந்தியாவுக்கு 5 பதக்கங்களை வென்று கொடுத்துள்ளனர்.




உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் அமெரிக்க வீரர் எல்ரா, இந்திய வீரர் ஷரத்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அமெரிக்க வீரர் எல்ரா 1.94 மீட்டர் உயரத்தை அபாரமாக தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதனைத் தொடர்ந்து தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல் 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கத்தையும், ஷரத்குமார் 1.88 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.


அதேபோல் பெண்களுக்கான 400 மீட்டர் (T20) ஓட்டத்தில் ஜீவன்ஜி வெண்கல பதக்கம் வென்றார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F46) போட்டியில் அஜீத் சிங் வெள்ளிப் பதக்கத்தையும், சுந்தர் குர்ஜார்  வெண்கல பதக்கத்தையும் வென்றனர். இந்தியா நேற்று ஒரே நாளில் மட்டும் ஐந்து பதக்கங்களை வென்றது. இதுவரை மூன்று தங்கம், ஏழு வெள்ளி, பத்து வெண்கலம், என மொத்தம் 20 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளன. 


குறிப்பாக தொடர்ந்து மூன்று பாரா ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்று சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் மாரிமுத்து தங்கவேல். கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேல் முதல் தங்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


முதல்வர் மு.க.ஸ்டாலின் மாரியப்பன் தங்கவேலுவைப் பாராட்டி வெளியிட்டுள்ள செய்தியில், மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள். தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன் என்று வாழ்த்தியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்