16 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையில் கைது.. உடனடியாக மீட்க வேல்முருகன் கோரிக்கை

Su.tha Arivalagan
Mar 14, 2023,07:56 AM IST
சென்னை: இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 16 தமிழ்நாட்டு மீனவர்களையும் உடனடியாக மீட்டு விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நிரந்தரத் தீர்வையும் காண முயல வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மீனவர்கள் 600க்கும் மேற்பட்டோர் சிங்களப் கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நாடுகளுக்கு இடையே கடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாடுகளுக்கு இடையே யுத்தம் வரும் போதுகூட ஒரு நாட்டின் மீனவர்களை எதிரி நாட்டு ராணுவம் கொல்வதில்லை. இந்தியா- பாகிஸ்தான் இடையே அடிக்கடி போர் மேகம் சூழ்கிறது.



இருப்பினும், இந்தியா-பாகிஸ்தான் இடையே மீன்பிடிக்கும் குஜராத், மகாராஷ்டிரா மீனவர்களை அந்நாட்டு ராணுவமோ, கராச்சி மீனவர்களை இந்திய ராணுவமோ சுட்டுக் கொன்றதில்லை. எல்லை தாண்டினால் கைது செய்து எச்சரித்து அனுப்புகிறார்கள்.

ஆனால், தமிழர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக நமது மீனவர்களை சிங்களப் படையினர் கொல்கிறார்கள். தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை சிறையில் அடைகிறார்கள். மீனவர்கள் படகுகள், வலைகள் சேதப்படுத்துகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக தான், தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களை கைது செய்த சிங்களப் கடற்படையினர், மீனவர்களின் இரு விசைபடகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொடுக்கும் துணிச்சல்தான் காரணம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கதக்கது.

சிங்களப் கடற்படையின் இந்த தொடர் தாக்குதலின் காரணமாக, மீன் பிடி தொழில் அழியும் நிலை ஏற்படும். வங்கக்கடலில் பாரம்பர்யமாக மீன்பிடித்து வரும் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமை பறிபோகும்.

தமிழ்நாட்டு மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அவர்களின் சம்பாத்தியத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் குடும்பத்தினர், மீனவர்கள் சிறையில் இருந்து திரும்பி வரும் வரை தினசரி உணவிற்கு என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு என்ன சொல்ல போகிறது.

தமிழ்நாட்டிற்கு, 1076 கிலோ மீட்டர் நீள கடல் உள்ளது. ஆனால், இந்த கடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க முடியவில்லை என்பது தமிழ் இனத்திற்கு ஏற்பட போகும்  உரிமை இழப்புகள், தமிழ் இனத்தின் அனைவருக்கு மான உரிமை இழப்புகள் ஆகும்.

எனவே, சிங்களப் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களின் உபகரணங்களையும் மீட்க, தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

எதிர் வரும் காலங்களில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, சிங்கள அரசிடம், இந்திய ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழ்நாட்டு மீனவர்களின் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இதற்கு ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அ��சு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.