2 பேரின் உயிரைப் பறித்த கூடலூர் சிறுத்தை பிடிபட்டது.. மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர்!

Su.tha Arivalagan
Jan 07, 2024,03:29 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை கடந்த 2 மாதமாக மிரட்டி வந்த சிறுத்தை ஒரு வழியாக பிடிபட்டுள்ளது. கூடலூர் அருகே இந்த சிறுத்தையை மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்துள்ளனர்.


பிடிபட்ட சிறுத்தைக்கு 2 மயக்க ஊசி போட்டுப் பிடித்துள்ளனர். அந்த சிறுத்தையை பின்னர் கூண்டில் அடைத்து தற்போது முதுமலைப் பகுதிக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வனிதா என்ற பெண், நான்சி என்ற சிறுமி ஆகியோரின் உயிரைப் பறித்த சிறுத்தை பிடிபட்டிருப்பது, கூடலூர், பந்தலூர் பகுதி மக்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது.


முன்னதாக  நேற்று நான்சி என்ற 3 வயது சிறுமி சிறுத்தை கடித்து பரிதாபமாக உயிரிழந்ததால், மக்கள் கொதிப்படைந்தனர். 


2 மாதமாக அச்சுறுத்திய சிறுத்தை:




பந்தலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக இந்த சிறுத்தை சுற்றி வந்தது. பலரை அது கடித்துக் காயப்படுத்தியுள்ளது. மேலும் சரிதா என்ற பெண் சிறுத்தை தாக்கி உயிரிழந்துள்ளார். இதனால் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். கூண்டும் வைக்கப்பட்டது. ஆனால் சிறுத்தை சிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று ஒரு பெரும் சோகம் நடந்து விட்டது.


3 வயது சிறுமி நான்சி:




தொண்டியாளம் என்ற இடத்தில் 3 வயதான நான்சி என்ற சிறுமியை சிறுத்தை கவ்வி எடுத்துச் சென்று விட்டது. இதைப் பார்த்து அந்தப் பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் வனத்துறைக்குத் தகவல் போனது. வனத்துறையினர் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது ஒரு இடத்தில் சிறுமி கழுத்தில் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நான்சி பரிதாபமாக உயிரிழந்தார்.


கர்வா - மிலாந்தி தேவி தம்பதியின் மகள்தான் நான்சி. வட மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் இங்கு தங்கு தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோதுதான் நான்சியை சிறுத்தை தூக்கிச் சென்று விட்டது. நான்சி பலியான தகவல் பரவி அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். அவர்களை போலீஸார் அமைதிப்படுத்தினர். 


இரவு முழுவதும் நடந்த மக்கள் போராட்டத்தால் பந்தலூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே, சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சிகளில் ஒன்றாக முதுமலையில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இவற்றைக் கொண்டு சிறுத்தையை பிடிக்கும் முயற்சிகள் நடந்து வந்தன.


பந்தலூரில் கடையடைப்பு:




இதற்கிடையே, நான்சி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், சிறுத்தையை விரைவாக பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று பந்தலூரில் கடையடைப்பு நடத்தப்பட்டது. அதேசமயம்,  இதற்கிடையே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பந்தலூர் தாலுகா முழுவதும் போலீஸ் 144 தடை விதிக்கப்பட்டிருந்தது.


இதைத் தொடர்ந்து சிறுத்தையை, துப்பாக்கியில் மயக்க ஊசி பொருத்தி சிறுத்தை மீது சுட்டுப் பிடிக்க வனத்துறை ஆலோசனை நடத்தியது. அதன்படி தற்போது மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடித்துள்ளனர்.