பஞ்சாமிர்த பேச்சு.. இயக்குனர் மோகன் ஜி மீது 2 பிரிவுகளில் பழனி போலீஸ் புதிய வழக்கு பதிவு!

Meenakshi
Sep 25, 2024,01:20 PM IST

திண்டுக்கல்: பழனி பஞ்சாமிர்தம் குறித்து தவறான தகவலை பரப்பியதாக பழனி தேவஸ்தானம் சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் மோகன் ஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களை பரப்புவது, குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் தற்போது பழனி காவல் நிலையத்தில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆந்திர மாநிலம் திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுமு் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் பன்றி கொழுப்பு, மாட்டு கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்படவதாக புகார் எழுந்த நிலையில், தற்போது அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் மோகன் ஜி தமிழ்நாட்டின் பழனி கோவில் குறித்து கூறிய கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.




இயக்குனர் மோகன் ஜி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. அந்த பேட்டியில், "நமக்குத் தெரிந்த கோவில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதாகத் செவி வழியாக வந்த செய்தியாக கேள்விப்பட்டேன்" எனத் தெரிவித்திருந்தார். 


இந்தக் கருத்தைத் தொடர்ந்து திருச்சியில் மோகன் ஜி மீது போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், இயக்குனர் மோகன் ஜியை சென்னை காசிமேடு இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட மோகன்ஜி பின்னர் திருச்சி மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மோகன் ஜி விடுவிக்கப்பட்டார்.


இதற்கிடையே பழனி தேவஸ்தானம் சார்பில் பழனி அடிவாரத்தில் உள்ள காவல் நிலையத்தில் மோகன் ஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து மோகன் ஜி மீது 2 பிரிவுகளில் பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தவறான தகவல்களை பரப்புவது, குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக மோகன் ஜிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த பழனி போலீசார் திட்டமிள்ளதாக தெரிகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்