2 நாள் கோலாகலம்.. பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024... மிஸ் பண்ணிடாதீங்க!

Aadmika
Aug 18, 2024,06:05 PM IST

சென்னை: வழக்கமாக அரசியல் கட்சிகள் மாநாடு, தமிழ் மொழி மாநாடு நடத்தி தான் நாம் பார்த்திருக்கிறோம். கேட்டிருக்கிறோம். ஆனால் தற்போது முதல் முறையாக பழனியில் முருகன் மாநாடு நடத்தப்பட உள்ளது. இது உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.


தமிழ் கடவுளான முருகப் பெருமான் வழிபாடு உலகம் முழுவதும் பரவி உள்ளது. முருகப் பெருமானுக்கு உலகம் முழுவதும் பல கோடி பக்தர்கள் இருக்கிறார்கள். மற்ற எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பான முருகப் பெருமானுக்குரிய தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் வெளிநாட்டவர்கள் கூட விழா எடுத்து சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், சமீப காலமாக இளைஞர்களிடம் முருகன் வழிபாடு மீதான ஆர்வம் அதிகரித்து வருவதாகும். கடந்த சில ஆண்டுகளாக முருகனுக்கு அலகு குத்தி, காவடி எடுக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக புள்ளிவிபரம் ஒன்று சொல்கிறது.




இந்நிலையில் பழனியில் தமிழக  இந்து அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட் 24, 25 ஆகிய இரண்டு நாட்களும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட உள்ளது.  இதில் முருகப் பெருமானின் பெருமையை உணர்த்தும் வகையில் அறுபடை வீடுகளில் கண்காட்சி, புகழ்பெற்ற முருகன் கோவில்களில் கண்காட்சி அரங்கம், வேல் வகுப்பு, ஆதீனங்களின் சிறப்பு உரை, திருப்புகழ் பஜனை, ஆன்மிக சொற்பொழிகள், கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், 3டி தொழில்நுட்பத்துடனான முருகன் பாடல் காட்சி அரங்கங்கள், வெளிநாட்டு முருக பக்தர்களின் சிறப்புரைகள் ஆகியவை இடம்பெற உள்ளன.


அதோடு விருது வழங்கும் விழாவும், நூல் வெளியீட்டு விழாவும் நடத்தப்பட உள்ளது. முருகப் பெருமானின் பெருமைகளை உலகம் அறிய செய்வதர்களை பாராட்டும் வகையில் 15 முருகன் அடியாளர்களின் பெயர்களில் விருது வழங்கப்பட உள்ளது. வெளிநாட்டு அமைச்சர், பிரமுகர்கள், உள்நாட்டு பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.


வழக்கமாக முருகனின் அறுபடை வீடுகளிலேயே பழனியில் தான் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி வழிபடுவார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் பழநி மலையில், முக்கிய விழாக்காலங்களில் மட்டும் பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். தற்போது உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நடைபெற உள்ள இந்த முருகன் மாநாட்டிற்காக கோடிக்கணக்கான முருக பக்தர்கள் பழனி மலையில் குவிய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.