பாகிஸ்தானில் பெரும் குழப்பம்.. ஆட்சியமைக்கப் போவது யாரு?.. படு சூடாக நடக்கும் குதிரை பேரம்!

Su.tha Arivalagan
Feb 10, 2024,05:16 PM IST

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இறுதி முடிவுகள் வருவதற்கு முன்பாகவே ஆளாளுக்கு ஆட்சியமைக்க உரிமை கோரி வருவதால் அங்கு பெரும் குழப்ப சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ளது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் முழுமையான முடிவுகள் வெளியாகவில்லை. இதுவரை நடந்த முடிவுகளின்படி யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவான சுயேச்சைகள் அதிக அளவில் வெற்றி பெற்றுளதால். தொலை தூரத்தில் 2வது இடத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சி உள்ளது.




இதில் ராணுவத்தின் ஆதரவு நவாஸ் ஷெரீப் கட்சிக்கு உள்ளது. நவாஸ் கட்சிக்காக ராணுவம் பெருமளவில் தேர்தல் முறைகேட்டை நடத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படி செய்தும் கூட நவாஸ் கட்சிக்குத் தேவையான எம்.பிக்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.


இந்தத் தேர்தலில் 3வது கட்சியாக பிலாவுல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கணிசமான இடங்களைப் பெற்றுள்ளது. கடந்த 2018 தேர்தலின்போது லேசான மெஜாரிட்டியுடன் இம்ரான் கான் கட்சி ஆட்சியமைத்தது. இந்த ஆட்சியை 2022ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் பூட்டோ கட்சி கை கோர்த்து விரட்டியடித்தன. ஆனால் இந்த ஆட்சியும் நீடிக்கவில்லை.


இந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆனால் இம்முறை யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எம்பிக்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரம் சூடுபிடித்துள்ளது.


இறுதி நிலவரப்படி மொத்தம் தேர்தல் நடந்த 266 தொகுதிகளில், இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்களுக்கு 91 இடங்கள் கிடைத்துள்ளன. 2வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ஷெரீப் கட்சிக்கு 71 இடங்களும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 54 இடங்களும் கிடைத்துள்ளன. சுயேச்சைகள் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு 33 இடங்கள் கிடைத்துள்ளன.