எப்படி சிக்கிருக்குது பாகிஸ்தான்.. சீனா, சவூதிக்கு 77 பில்லியன் டாலர் கடனை அடைக்கணுமாம்!

Su.tha Arivalagan
Apr 08, 2023,02:02 PM IST
இஸ்லாமாபாத்: 2026ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சீனா மற்றும் சவூதி அரேபியா நாடுகளுக்கு 77.5 பில்லியன் டாலர் கடனை பாகிஸ்தான் அடைக்க வேண்டுமாம்.  அதைக் கட்டாவிட்டால் கடும் விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க வேண்டி வருமாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த அமைதிக்கான அமெரிக்க கழகம் என்ற அமைப்பு இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில் பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசியல் மோதல்கள் உச்சத்தில் உள்ளன. தீவிரவாதம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது.



மிகப் பெரிய அளவில் கடன் சுமை பாகிஸ்தானை அழுத்திக் கொண்டுள்ளது. மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்குண்டுள்ளது. பாகிஸ்தான் கரன்சி மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வெளிநாட்டு இருப்புகளும் வெகுவாக குறைந்து போய் விட்டன.

பாகிஸ்தான் வருகிற 2026ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சீனா மற்றும் சவூதி அரேபியாவுக்கு 77.5 பில்லியன் டாலர் கடனை அடைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை அது சந்திக்க வேண்டி வரும்.  சீனாவிடம் மிகப் பெரிய கடனை பாகிஸ்தான் வாங்கியுள்ளது. அதேபோல சவூதி அரேபியாவிலும் தனி நபர்களிடம் பெருமளவில்  கடன் வாங்கி வைத்துள்ளது.

இவ்வளவு கடன் தொகை நிலுவையில் இருந்தும் கூட சீனாவிடம் மீண்டும் கடன் வாங்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக சீன அதிகாரிகளிடம் பாகிஸ்தான் அரசுத் தரப்பில் பேசவுள்ளனர்.  ஆனால் இந்த கடன் சுமையை பாகிஸ்தானால் சமாளிக்க முடியுமா என்பது சந்தேகமே.

சர்வதேச நிதியத்திடமிருந்து 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை பாகிஸ்தான் எதிர்நோக்கி உள்ளது. அது கிடைத்தால்தான் பாகிஸ்தானின் நிதி நிலைமை கொஞ்சமாவது சரியாக வாய்ப்புண்டு. ஆனால் அந்த நிதி வருவதில் தாமதம் நிலவுகிறது.