9 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல நேரம்..  இந்தியா வருகிறார் பாகிஸ்தான் அமைச்சர்!

sahana
Apr 20, 2023,04:48 PM IST
புதுடில்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ வரும் மே மாதம் இந்தியா வருகிறார். 9 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்தியா வருவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை, 2021 அக்டோபரில் இந்தியா ஏற்றது. கடந்த 2022ம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது. அப்போதே இந்த ஆண்டுக்கான மாநாடு இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.



அதன்படி, இந்தாண்டு கோவாவில் மே மாதம் 4 மற்றும் 5ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்காக அந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஜனவரியில் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில், நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனாவுக்கும் இந்தியா அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ மே மாதம் 4ம் தேதி இந்தியா வருகிறார். இதனை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்தது.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கோவா மாநிலத்தில் வரும் மே 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ கலந்து கொள்கிறார். பாகிஸ்தான் குழுவிற்கு அவர் தலைமை தாங்கிச் செல்கிறார். வெளியுறவு அமைச்சர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கோட்பாடுகளை பாகிஸ்தான் எவ்வளவு மதிக்கிறது என்பதற்கும் இந்தப் பிராந்தியத்தின் வெளியுறவு கொள்கைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கும் எடுத்துக்காட்டு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். கடைசியாக 2014ம் ஆண்டு பாக்., பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் இந்தியா வந்திருந்தார். அதன்பிறகு இரு நாட்டுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக இரு நாட்டு தலைவர்களும் பயணத்தை தவிர்த்து வந்தனர். வரும் செப்டம்பரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்காது என தெரிவித்திருந்தது. இதற்கு பதிலடியாக அக்டோபர், நவம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் அமைச்சர் சம்மதித்திருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.