பாகிஸ்தானில்.. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியை தடை செய்ய அரசு முடிவு!

Su.tha Arivalagan
Jul 15, 2024,05:41 PM IST

இஸ்லாமபாத்:   பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியைத் தடை செய்ய முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் செய்தித்துறை அமைச்சர்  அட்டா தரார் தெரிவித்துள்ளார்.


பிடிஐ என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் என்ற கட்சியை இம்ரான் கான் நடத்தி வருகிறார். இந்தக் கட்சி சார்பில் ஒருமுறை பிரதமராகவும் அவர் பதவி வகித்துள்ளார். தற்போது பல்வேறு வழக்குகளில் சிக்கி ஜெயிலுக்கும், வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.




இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 2வது பெரிய கட்சியாக இருக்கும் இம்ரான் கானின் கட்சிக்கு ஒரு பூஸ்ட் கிடைத்துள்ளது. அதாவது சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் இம்ரான் கான் கட்சிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும் கட்சியாக இம்ரான் கான் கட்சி உருவெடுக்கவுள்ளது. மேலும் தற்போதைய ஆளும் கூட்டணி அரசுக்கும் பெரும்பான்மை பலம் பறி போய் விடும்.


இதனால் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதைத் தவிர்க்க இம்ரான் கான் கட்சியையே தடை செய்து விட ஷெரீப் அரசு முடிவு செய்துள்ளதாம். இதுகுறித்து செய்தித்துறை அமைச்சர் அட்டா தரார் கூறுகையில், பிடிஐ கட்சி இருக்கும் வரை நாடு முன்னேற முடியாது. பிடிஐ கட்சி தேச விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்தக் கட்சி மீதான வழக்குகளே இதற்கான சான்று. இதை வைத்தே அந்தக் கட்சியைத் தடை செய்யலாம்.


விரைவில் கட்சியைத் தடை செய்வது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று அட்டா தரார் கூறியுள்ளார். பிடிஐ கட்சியை பாகிஸ்தான் அரசு தடை செய்யப் போவதாக வெளியாகியுள்ள செய்திகள் அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அப்படி செய்தால் மீண்டும் பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆதரவாளர்களால் பெரும் கலவரம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.