"மதமே முக்கியம்".. 18 வயதிலேயே கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்ட பாக். வீராங்கனை!

Su.tha Arivalagan
Jul 21, 2023,04:44 PM IST
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனை ஆயிஷா நஸீம், தனது 18 வயதிலேயே கிரிக்கெட் விளையாட்டுக்கு முழுக்குப் போட்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தனது மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆயிஷா நசீம் கூறியுள்ளார். ஒரு நேரத்தில், மாபெரும் கிரிக்கெட் திறமையாளர் என்று புகழ் பெற்ற முன்னாள் வீரரான வாசிம் அக்ரமால் பாராட்டப்பட்டவர் ஆயிஷா என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் தனது இஸ்லாமிய  மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ஆயிஷா. அதிரடி பேட்ஸ்வுமன் ஆன ஆயிஷா, கிரிக்கெட் உலகில் மிகப் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில்ஓய்வை அறிவித்துள்ளார்.



அவரது முடிவிலிருந்து அவரை திரும்பப் பெற வைக்க பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் நிடா தர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தீவிரமாக முயற்சித்தனர். ஆனால் தனது முடிவில் பிடிவாதமாக இருந்து விட்டார் ஆயிஷா.

கடந்த மார்ச் மாதமே தனது முடிவை கிரிக்கெட் வாரியத்துக்கு அவர் அறிவித்து விட்டாராம். இனிமேல் நான் விளையாட மாட்டேன் என்றும் கூறி விட்டாராம். அதன் பின்னர் அவரை சமாதானப்படுத்த தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளனர். ஆனால் எதுவும் பலன் தராததால் தற்போது அவரது முடிவை ஏற்றுக் கொண்டுள்ளனராம்.

இஸ்லாமில் கூறியுள்ளபடி தான் வாழப் போவதாகவும், மத மார்க்கத்தின் வழியில் தான் போகப் போவதாகவும் கூறியுள்ளாராம் ஆயிஷா.  அவர் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 4 ஒரு நாள் போட்டிகளிலும், 30 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

மிகவும் பிற்போக்கான குடும்பத்திலிருந்து வந்தவர் ஆயிஷா. அவர் கிரிக்கெட் விளையாட குடும்பத்திடமிருந்து போராடித்தான் அனுமதியே வாங்க முடிந்ததாம். ஆனால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக பல்வேறு ஊர்களுக்கு அவர் அணியினருடன் போக ஆரம்பித்தபோது அதற்கு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியதாம். இதனால்தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்தாராம் ஆயிஷா என்று சொல்லப்படுகிறது.

கிரிக்கெட் விளையாட்டை விட்டு விட்டு மதத்தின் பக்கம் பாகிஸ்தான் வீரர்கள் திரும்புவது இது புதிதல்ல. இதற்கு முன்பு  சயீத் அன்வர், இன்சமாம் உல் ஹக்,  முகம்மது யூசப், சக்லைன் முஷ்டாக், முஷ்டாக் அகமது போன்றோர் மத மார்க்கத்திற்குத் திரும்பியுள்ளனர். அதிலும் சயீத் அன்வர் 2002ம் ஆண்டு தனது மகள் இறந்த பிறகு முழுமையாக கிரிக்கெட்டை விட்டு விட்டு மத குருவாகவே மாறி விட்டார்.