கர்நாடகத்தின் KGFக்கு குறி வைக்கும் பா. ரஞ்சித்.. "அண்ணன் ராஜேந்திரன் ஜெயிக்கணும்"!

Su.tha Arivalagan
Apr 08, 2023,09:45 AM IST
சென்னை: கர்நாடக மாநிலசட்டசபைத் தேர்தலில் கேஜிஎப் எனப்படும் கோலார்தங்க வயல் தொகுதியில் போட்டியிடும் இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர் எஸ். ராஜேந்திரனை மீண்டும் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று கேஜிப் தமிழர்களுக்கு இயக்குநர் பா. ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள சட்டசபைத் தொகுதிதான் கேஜிஎப் எனப்படும் கோலார் தங்க வயல். மிகுந்த பாரம்பரியம் கொண்ட தொகுதி இது. தமிழர்கள் பெருமளவில் வாழும் தொகுதியும் கூட. கோலால் தங்க வயல் ஓஹோவென்று இருந்தபோது அதன் வளர்ச்சியிலும், செழுமையிலும் தமிழ் மக்களின் ரத்தமும் கலந்திருந்தது. தங்க வயல் ஜொலிக்க முக்கியக் காரணமே தமிழர்கள்தான்.



தங்க வயல் மூடப்பட்ட பின்னர் தமிழர்களின் வாழ்வாதாரமும் ஓய்ந்து போனது. இந்த கேஜிஎப்பை மையமாகவைத்துத்தான் கேஜிஎப் படமும் உருவானது. கேஜிஎப் சட்டசபைத் தொகுதியில்  2 முறை எம்எல்ஏவாக இருந்தவர் தங்கவயல் ராஜேந்திரன் என அழைக்கப்படும் எஸ். ராஜேந்திரன். இந்திய குடியரசுக் கட்சியின் தலைவராக இருக்கிறார் ராஜேந்திரன். 1994 மற்றும் 2004 ஆகிய இரு ஆண்டுகளில் இங்கு எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் ராஜேந்திரன்.

தமிழர்களுக்குள் பல்வேறு பிரிவினைகள் ஏற்பட்டு அதன் காரணமாக இங்கு தமிழர்களின் வாக்குகள் சிதறவே பிறர் உள்ளே வந்து எம்எல்ஏவாகும் நிலை ஏற்பட்டு விட்டது. தற்போது இந்தத் தொகுதியில் ரூப்கலா என்பவர் எம்எல்ஏவாக உள்ளார். இந்த நிலையில் மீண்டும் ராஜேந்திரன் கேஜிஎப் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த முறை அவர் வெல்வார் என்று பலமாக பேசப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித்தும் ராஜேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றைப் போட்டுள்ளார். அதில் ரஞ்சித் கூறியிருப்பதாவது:

கேஜிஎப் தமிழ் மக்களுக்கு என்னோட அன்பு வேண்டுகோள். இந்த முறை அண்ணன் ராஜேந்திரன் இந்தியக் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்த முறை நாம் தவற விட்டு விடக் கூடாது. நமக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். கட்சி சார்ந்து, குழுக்கள் சார்ந்து, ஏன் தெருக்கள் சார்ந்து இருக்கலாம். ஆனால் அதைத் தவிர்த்து நமக்கென்று அதிகாரம், அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும். ஏற்கனவே இழந்ததை திரும்ப கைப்பற்றியாக வேண்டிய கட்டாயம்  கேஜிஎப் தமிழர்களுக்கு உ��்ளது. இருக்கும் பலத்தை திரும்ப நிரூபிக்க முக்கியமான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடவே கூடாது. எப்படியாவது வெற்றி பெற வைக்கணும். முரண்பாடுகளைத் தவிர்த்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து அரசியல் உரிமைகளைப் பெற  சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். அண்ணனுக்கு எனது வாழ்த்துகள், எனது முழு ஆதரவு அவருக்கு உண்டு. நீங்களும் ஆதரியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார் பா. ரஞ்சித்.

பா. ரஞ்சித்தின் தங்கலான் படத்தின் ஷூட்டிங்கும் கேஜிஎப்பில்தான் நடைபெற்றது என்பது நினைவிருக்கலாம்.