மணிப்பூருடன் ராஜஸ்தான், சட்டிஸ்கரை எப்படி ஒப்பிடலாம்.. ப.சிதம்பரம் எதிர்ப்பு

Su.tha Arivalagan
Jul 23, 2023,10:30 AM IST
டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து கருத்து கூறும்போது, பீகார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் மாநிலங்களுடன் பாஜகவினர் ஒப்பிட்டுப் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி கருத்து கூறியிருந்தார். அப்போது ராஜஸ்தான், சட்டிஸ்கர் மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர் பேசியிருந்தார். இதையடுத்து தற்போது பாஜகவினரும் இந்த மாநிலங்களைப் பற்றி அதிகம் பேசி வருகிஇன்றனர். குறிப்பாக மேற்கு வங்காளத்தைப் பற்றி அவர்கள் அதிகம் பேசி வருகின்றனர்.




இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து கூறியுள்ளார். அவர் கூறுகையில், வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் அரசு நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்து போய்க் கிடக்கிறது. இதுகுறித்து மத்திய அரசு கவலையே படாமல் பாதி கோமாவில் இருக்கிறது.

பாஜகவினர் மணிப்பூர் நிலவரத்தை பீகார், சட்டிஸ்கர், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடுவது கடும் கண்டனத்துக்குரியது. இது திசை திருப்பும் செயலாகும். வன்முறையால் நிலைகுலைந்து போயுள்ள மணிப்பூர் விவகாரத்திலிருந்து மக்களை மடை மாற்ற முயலுகிறது பாஜக என்றார் ப.சிதம்பரம்.

இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் தேர்தல் கலவரத்தின்போது இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டதாக ஒரு வீடியோ உலா வருகிறது. ஆனால் அது தேர்தல் கலவரத்தால் நடந்ததல்ல என்றும், உள்ளூர் கடையில் திருட முயன்ற இரண்டு பெண்களை அப்பகுதியில் கடை வைத்திருக்கும் பெண்கள்தான் தாக்கியதாகவும் சிலர் விளக்கி வருகின்றனர்.