விலைவாசி உயர்வு பற்றி பிரதமர் வாய் திறப்பதே இல்லை: ப. சிதம்பரம் தாக்கு

Meenakshi
Mar 09, 2024,03:19 PM IST

சென்னை: கேஸ் சிலிண்டர் விலையை ரூ.100 தேர்தலுக்கு முன்பு குறைப்பதை விட, தேர்தலுக்கு பிறகு உயர்த்த மாட்டேன் என பிரதமர் மோடி சொல்ல வேண்டும்  என காங்கிரஸ் எம்.பி., ப. சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.


நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றது. எப்படியாவது இந்த 2024ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், மீண்டும் பாஜக.,வை ஆட்சிக்கு வர விடக் கூடாது என்ற எண்ணத்துடனும் கட்சி தலைமை முதல் தொண்டர்கள் வரை செயல்பட்டு வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் வேகம் காட்டி வருகிறது. பிரதமர் மோடியையும், மத்தியில் ஆளும் பாஜக அரசையும் கடுமையாக தாக்கி பேசவும் துவங்கி விட்டனர்.




இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,ப.சிதம்பரம் பேசுகையில், பிரதமர் மோடி பதவிக்கு வருவதற்கு முன்னால் பெட்ரோல் ரூ.50, டீசல் ரூ. 40 என்று சொன்னார். குறைத்து இருக்கிறார்களா?  ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடுவேன் என்றார். போட்டிருக்கிறாரா?  தேர்தலுக்கு முன்னர் 100 ரூபாய் குறைப்பார்கள். அதே போல் தேர்தலுக்கு பிறகு  ரூ.100 உயர்த்த மாட்டோம் என்று சொல்லட்டும். தேர்தலுக்காக குறைப்பதை வேண்டாம் என்று சொல்லவில்லை.  தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் விலையை உயர்த்த மாட்டேன் என பாஜக வாக்குறுதி அளிக்கட்டும்.


வேலையின்மை என்பது மிகப்பெரிய கொடுமையாக இருக்கிறது. அதைப்பற்றி எல்லாம் பிரதமர் பேசுவது கிடையாது. வாரா வாரம் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி வேலையின்மை பற்றியும், விலைவாசி உயர்வு பற்றியும், எதுவுமே பேசுவதில்லை. இளைஞர்கள் தங்கள் முன்னேற்றத்திற்காக தங்களின் குடும்பத்தின் உயர்வுக்காக இந்த அற்புத ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற போகும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில் இந்த 5 வாக்குறுதிகளை வைத்து நாங்கள் பிரச்சாரம் செய்ய உள்ளோம் என்றார்.