சென்னையில் விடிய விடிய வெளுத்த கனமழை.. ஆத்தாடி என்னா இடி.. இன்னிக்கும் இருக்காம்!

Aadmika
Aug 14, 2023,08:58 AM IST
சென்னை : சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இன்றும் பல இடங்களில் மழை தொடரும் என இந்திய  வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக பரவலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மாலை நேரங்களிலும், சில இடங்களில் பகல் பொழுதிலும் மழை பெய்து வந்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளுமையான சூழல் நிலவி வந்தது. 

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 13) இரவு பத்து மணிக்கு மேல் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. நந்தனம், மயிலாப்பூர், வலசரவாக்கம், ஐயப்பந்தாங்கல், குரோம்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. மவுண்ட் ரோடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்க துவங்கி உள்ளது.

வட  சென்னையில் மழை வெளுத்துக் கட்டியது. பலத்த இடி மின்னலும் சேர்ந்து கொண்டு சென்னைக்கு மேலே வருணன் வச்சு செய்து விட்டார். 

இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. எனவே இன்றும் மழைக் கச்சேரி காத்திருக்கிறது.. மக்களே பஜ்ஜி சொஜ்ஜி + இளையராஜா பாட்டுக்களுடன் என்ஜாய் பண்ண தயாராக இருந்துக்கோங்க!