மிக கனமழை எதிரொலி.. நீலகிரி, கோவைக்கு.. இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை !

Manjula Devi
Jun 26, 2024,06:01 PM IST

ஊட்டி: நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் அதிக அளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும்வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இப்பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 




மேலும் கோவையில் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இது தவிர நீலகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது.


இந்த நிலையில் இன்றும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதால் பகுதிகளில் இன்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


இது தவிர திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை கனமழை:


நீலகிரி, கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளில் கன மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குமரி மாவட்ட வனப்பகுதிக்கு செல்ல தடை:


குமரி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் வனப்பகுதிகளில் உள்ள கீரிப்பாறை மற்றும் காளிகேசத்துக்கு  சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காளிகேச பகுதியில் தற்போது காற்றாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதி மக்கள் ஆற்றைக் கடக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேலும்  கன்னியாகுமரியில் இரவு மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதால் காளிக்கேசப் பகுதி மக்கள் கவனமுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.