"நான் ரெடி தான்..  வரவா".. வச்சு செய்யப் போகும் பெரிய மழை.. 6ம்  தேதி வரை..  எச்சரிக்கை!

Su.tha Arivalagan
Nov 03, 2023,04:17 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 6 தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் இந்திய  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கன்னியாகுமரி மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் ஒரு கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு கீழடுக்கு  சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

31 மாவட்டங்களில்...

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 31 மாவட்டங்களில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

குறிப்பாக  இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர் ,விழுப்புரம் கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ,கரூர், திருச்சி ,அரியலூர் பெரம்பலூர் ,தேனி, திண்டுக்கல் ,மதுரை, புதுக்கோட்டை ,தஞ்சை திருவாரூர், நாகை, திருப்பூர், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ,ஆகிய 31 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.



இன்று மிக கனமழை மற்றும் கனமழை பெய்யும் மாவட்டங்கள்..

மிக கனமழை எச்சரிக்கை காரணமாக திண்டுக்கல், தேனி ,தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ,ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு இன்று  ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக நீலகிரி ,கோவை , ஈரோடு ,திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை ,மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ,ஆகிய 10 மாவட்டங்களில் இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மிக கனமழை மற்றும் கனமழை பெய்யும் மாவட்டங்கள்..

நாளை மிக கனமழை பெய்யும் மாவட்டங்களான கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை ,தூத்துக்குடி, இராமநாதபுரம் ,ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், கன மழை பெய்யும் மாவட்டங்களான மதுரை ,விருதுநகர் ,திருப்பூர், ஈரோடு ,தென்காசி, தேனி ,திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தற்போது தமிழகத்தில் ஆறாம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . இதனால்  மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.