குடை ரெடியா.. தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை.. 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!

Manjula Devi
Aug 16, 2024,07:31 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. அப்போது திடீரென கருமேகங்கள் ஒன்று திரண்டு கனமழை கொட்டி தீர்க்கிறது. பகல் நேரங்களில் வெட்கை சற்று அதிகமாக இருந்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இதமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் எந்தெந்த பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அதன்படி தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல், ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மூன்று மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.




அதேபோல் ஈரோடு, நாமக்கல் சேலம், திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட எட்டு  மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


நாளை மிக கனமழை: 


தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை கனமழை:


நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, ஆகிய எட்டு மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னையை பொறுத்தளவு அடுத்த 24 மணி நேரத்தில் வானமேகம் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்