நெல்லை வந்தே பாரத்..  கன்னியாகுமரி வரை நீடிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

Meenakshi
Sep 25, 2023,01:50 PM IST

சென்னை: சென்னை டூ திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்  கடிதம் எழுதியுள்ளார்.  


சென்னை டூ திருநெல்வேலி  இடையே வந்தே பாரத் விரைவு ரயில்  சேவையை பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இதுவரை நாடு முழுவதும் 25 வந்தே பாரத் ரயில்கள் ஓடி வருகின்றன. இந்நிலையில் சென்னை டூ திருநெல்வேலி உட்பட 11 மாநிலங்களுக்கு இடையே நேற்று 9 வந்தே  பாரத் ரயில்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது.




இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்  கடிதம்  எழுதியுள்ளார். அதில், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும், விஜயவாடாவில் இருந்து சென்னைக்கும் 2 புதிய ரயில்கள் உள்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில்களை காணொளி வாயிலாக தொடங்கி வைத்ததற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


சென்னை எழும்பூர் -திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண  நேரம்  12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரத்திற்கும் குறைவாக இருக்கிறது. இது தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி உள்ளது. இருப்பினும் இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று  தமிழக மக்கள் விரும்புகின்றனர். 


எனவே வந்தே பாரத் விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் கூறியுள்ளார் ஓ.பி.எஸ்.