கேட்ட தொகுதிகள் கிடைப்பதில் சிக்கல்.. அதிர்ச்சியில் ஓ.பி.எஸ்.. அவசர ஆலோசனை!

Meenakshi
Mar 21, 2024,12:28 PM IST

சென்னை: பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவி வரும் நிலையில் ஓபிஎஸ் அணியின் மாநில மாவட்டச் செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஓ.பன்னீர் செல்வத்துக்குக் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


2024ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா, தமமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. கடந்த முறை அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பெரும்பாலான கூட்டணி கட்சிகள் இந்த முறை பாஜகவிற்கு சென்று விட்டன. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாஜக, இந்த முறை 20 இடங்களில் போட்டியிடும் என தெரிகிறது.




பாஜக-பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி 10 தொகுதிகளில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட தயாரகி வருகிறது பாமக. டிடிவி தினகரனின் அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக கூட்டணியில் உள்ள ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும், தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்திற்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


இந்நிலையில், பாஜக-ஓபிஎஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது அதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பில் 3 தொகுதிகள் கேட்ட நிலையில், ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க பாஜக முன்வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதுவும் கூட தேனி கிடையாதாம். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளது ஓபிஎஸ் தரப்பு. இதையடுத்து தங்களது மாவட்டச் செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார் ஓ.பி.எஸ். இக்கூட்டத்தில் வேறு என்ன முடிவெடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.


கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டால் தேர்தலில் போட்டியிடாமல் வெளியிலிருந்து ஆதரவு தரும் முடிவை ஓபிஎஸ் எடுக்கலாம் என்று தெரிகிறது.