மணிப்பூர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு?.. நேரில் செல்லும் எதிர்க்கட்சிகள்!

Aadmika
Jul 29, 2023,10:33 AM IST

டெல்லி : மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக அடுத்தடுத்து பல இடங்களில் கலவரங்கள், வன்முறைகள் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால் மணிப்பூரில் என்ன பிரச்சனை என நேரில் சென்று பார்க்க எதிர்க்கட்சிகள் இன்று மணிப்பூர் செல்கின்றன.


வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கிட்டதட்ட 3 மாதங்களாக தொடர்ந்து பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இரண்டு பெண்கள் நிர்வாணபடுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட விவகாரம் வெளியே வந்த பிறகு அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. 60,000 க்கும் அதிகமான துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.


மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்கட்சிகள் பார்லிமென்ட்டை செயல்பட விடாமல் முடக்கி வருகின்றன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் அங்கு என்ன பிரச்சனை நடக்கிறது என்பதை நேரில் பார்ப்பதற்காக எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் குழு இன்று மணிப்பூர் செல்கிறது.


காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிர் ரஞ்சன் செளத்ரி, கவுரவ் கோகாய், திரிணாமுல் கட்சியை சேர்ந்த சுஷ்மிதா தேவ், திமுக.,வை சேர்ந்த கனிமொழி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மனோஜ் குமார் ஜா உள்ளிட்டோர் அடங்கிய 21 உறுப்பினர்கள் கொண்ட குழு மணிப்பூர் செல்ல உள்ளது. இரண்டு நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலவரத்தை பார்வையிட உள்ளனர்.


மேலும் குகி பழங்குடியிவ தலைவர்கள், மகளிர் அமைப்பினர் உள்ளிட்டோர் சந்திக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிது. நிவார முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்கள் சென்று பார்க்க உள்ளதாக சொல்லப்படுகிறது.  ஆனால் மணிப்பூரில் தற்போதுள்ள சூழலில் எதிர்க்கட்சிகள் அங்கு செல்வது பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்யம் என பாஜக எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டி வருகிறது. 


நிலைமையை புரிந்து கொள்ளாமல் இதை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் நிலவரத்தை நேரில் பார்த்து மணிப்பூர் பிரச்சனைக்கு தாங்கள் தீர்வு காண உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.