சாதி வெறி வேட்பாளரைத் திரும்பப் பெறுக.. திமுகவுக்கு நீலம் பண்பாட்டு மையம் கோரிக்கை

Su.tha Arivalagan
Mar 19, 2024,05:51 PM IST

சென்னை: ஜாதி வெறியுடன் பேசியவரை கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளதற்கு நீலம் பண்பாட்டு மையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் இவர் போட்டியிடவுள்ளதால், இவரைத் திரும்பப் பெற திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீலம் பண்பாட்டு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.


திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிதான் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி.  இக்கட்சியின் இளைஞர் அணி  செயலாளராக இருப்பவர் சூரியமூர்த்தி. இவரைத்தான் இந்தக் கட்சி தற்போது தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.




இவர் மிகுந்த ஜாதி வெறியுடன், கொலை வெறியுடன் பேசிய ஒரு பழைய வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது. அதில் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரன் கவுண்டர் வீட்டுப் பெண்ணைக் காதலித்து அவளது வயிற்றில் அவனது கரு வளர்ந்தால், அந்தக் கருவை மட்டுமல்ல, தாயோடு கருவறுப்போம். இருவரையும் கூப்பிட்டு பிரித்து வைப்போம்.. பிரிய மறுத்தால் இருவரையும் கொலையும் செய்வோம் என்று பேசியுள்ளார்.


இந்த வீடியோவை சுட்டிக் காட்டி இவரா, சமூக நீதி பேசும் திமுகவின் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்.. இவரை எப்படி திமுக அனுமதிக்கிறது என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையமும் சூரியமூர்த்தியை உடனடியாக மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளது.


இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், "தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் கவுண்டர் வீட்டுப் பெண்ணைக் காதலித்து மணம் முடிக்க நினைத்தால் அவனுடைய தாயின் கருவில் வளரும்போது தாயோடு கருவறுப்போம்” என்று சுயசாதிவெறியுடன் பேசிய சமூகவிரோதி சூரிய மூர்த்தியை கொ.ம.தே.க சார்பில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்திருப்பதை சமூகநீதிக் காவலர்களாகச் சொல்லிக்கொள்ளும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பரிசீலிக்க வேண்டும். 


பகுத்தறிவும் சுயமரியாதையும் உள்ளவர்களால் எவ்வாறு இத்தகைய சாதி வெறியர்களுக்காக வேலை செய்ய முடியும். திட்டமிட்டே தலித்துகளுக்கு எதிராகச் செயல்படுகின்ற சாதி சங்கங்கள் தொடர்ந்து இவ்வாறு அமைதியைச் சீர்குலைக்கும் விதத்தில் பேசுவதைப் பிற கட்சிகள் கண்டுகொள்ளாவிட்டாலும் பெரியாரின் கொள்கையைக் கடைபிடிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சி அறத்தோடு செயல்படுவதுதான் சமூகநீதிக்கு அழகு. அந்த வகையினில் சூரிய மூர்த்திக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு நிச்சயம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.